மல்லிகா 'சில்க்' ஷெராவத்!

சொந்த வாழ்க்கையில் பல துயரங்களைச் சந்தித்தாலும், அவற்றைக் காட்டிக் கொள்ளாமல் தனது மயக்கும் சிரிப்பு, சொக்க வைக்கும் விழிகள், சுண்டியிழுக்கும் கவர்ச்சி மூலம் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளையடித்தவர் சில்க்.
சிவாஜி, ரஜினி, கமல் என எப்பேர்ப்பட்ட நடிகராக இருந்தாலும், சில்க் நடனம் இருந்தே தீரவேண்டும் என விநியோகஸ்தர்கள் தீர்மானமே போடும் அளவுக்கு தனது பிடிக்குள் சினிமாவை வைத்திருந்தார் சில்க். சக நடிகைகளுக்கு ஏராளமான பண உதவிகளைச் செய்து அவர்களின் அன்பையும் சம்பாதித்து வைத்திருந்தார்.
வெறும் கவர்ச்சியோடு நின்றுவிடாமல், எப்படிப்பட்ட வேடங்ளையும் சிறப்பாகக் கையாளும் திறமை அவருக்கிருந்ததால், தமிழ் நடிகைகளில் அவருக்கு மரியாதைக்குரிய இடம் கிடைத்திருந்தது.
ஆனால் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகள் காரணமாக எதிர்பாராமல் 1996ல் தற்கொலை செய்து கொண்டார் சில்க் ஸ்மிதா.
இந்தத் தற்கொலையின் பின்னணி குறித்து பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப் பட்டாலும், போலீசார் வழக்கு விசாரணையை முடித்துவிட்டனர். அந்த மர்மங்கள் என்ன, சில்க் தற்கொலைக்கு காரணமான நபர்கள் யார் என்ற கோணத்தில் ஒரு படம் தயாராகிறது இந்தியில்.
இந்தப் படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கப் போகிறவர் பாலிவுட் கவர்ச்சிக் குண்டு மல்லிகா ஷெராவத்.
டிவி தொடர் தயாரிப்பில் முன்னணியில் திகழும் ஏக்தா கபூர் இந்தப் படத்தை இந்தியில் தயாரிக்கிறார். பின்னர் அதை தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியிடப் போகிறார்களாம்.
சில்க் ஸ்மிதா இந்தியிலும் நன்கு பரிச்சயமான நடிகைதான். கமல்ஹாசனுடன் அவர் கலக்கிய மூன்றாம் பிறையின் இந்தி வடிவத்தில் நடித்து பாலிவுட்டிலும் புகழ் பெற்றார். அவரது மற்றொரு ஹிட் படமான 'அன்று பெய்த மழையில்...' இந்தியில் டப் செய்து வெளியிடப்பட்டது. மேலும் சில நேரடி இந்திப் படங்களிலும் அவர் நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











