ஜெவுடன் ரஜினி சந்திப்பு-மகள் நிச்சயதார்த்தத்துக்கு அழைப்பு!

ரஜினியும் ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் தாந். ஆனாலும் சூழ்நிலை காரணமாக இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதில்லை.
இருவருக்கும் இடையே நிகழ்ந்த மோதல்களும், பின்னர் சமாதானமாகிவிட்டதும் அனைவரும் அறிந்த ஒன்றே.
ஜெயலலிதாவுக்கு திரையுலகம் எடுத்த பாராட்டு விழாவில் ஒரு பொதுவான கலைஞன் என்ற முறையில் பங்கேற்று அவரை தைரியலட்சுமி என்றும் பாராட்டினார்.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் முதல் ஆளாக வந்திருந்து வாழ்த்தினார் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா.
பின்னர், ரஜினியின் அழைப்பை மதித்து சிவாஜி படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்து ரசித்தார். 'சகோதரர் ரஜினி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்' என்றும் பாராட்டினார்.
இந்நிலையில் நேற்று தனது மனைவி லதா, மூத்த மகள் மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோருடன் ஜெயலலிதா வீட்டிற்குச் சென்றார் ரஜினி. 20 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பின் போது ரஜினி தனது இளைய மகள் சௌந்தர்யா - அஸ்வின்குமார் திருமண நிச்சயத்தார்த்த பத்திரிகையை அளித்தார்.
தனது வீட்டிற்கு வந்த ரஜினி மற்றும் அவரது குடும்பத்தாரையும் வரவேற்று, மிகுந்த மகிழ்ச்சியோடு உபசரித்து அனுப்பி வைத்தார் ஜெயலலிதா.
இந்த சந்திப்பு குறித்த செய்தி மிகுந்த பரபரப்பை உண்டாக்கியதால், ஏராளமான நிருபர்கள் சில நிமிடங்களில் குவிந்துவிட்டனர் போயஸ் தோட்டத்தில்!.
சௌந்தர்யா- அஸ்வின் குமார் திருமண நிச்சயதார்த்தம் வரும் பிப்ரவரி 17ம் தேதி அடையாறு பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் நடக்கிறது. மாலை 7 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்வில் தனது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினரை அழைத்துள்ளனர் ரஜினி குடும்பத்தினர்.


Click it and Unblock the Notifications











