Baahubali: ஒரே பாகமாக ரீ-ரிலீஸ் ஆகவுள்ள பாகுபலி.. ராமௌலி அறிவிப்பு.. 3டில பார்த்தா எப்படி இருக்கும்?
ஹைதராபாத்: பாகுபலி படத்திற்கு முன்னரே இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநர் என்றாலும் உலக அரங்கில் ராஜமௌலியை அரியணை ஏற வைத்த படம் பாகுபலி. இரண்டு பாகங்களாக வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இரண்டு பாகங்களாக வெளியான இந்த படத்தை ஒரே பாகமாக வெளியிடப்போவதாக இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் பாகுபலி. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என பலர் நடித்து வெளியான படம். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்திய சினிமாவே பாகுபலிக்கு முன்னர் மற்றும் பாகுபலிக்குப் பின்னர் என பிரிக்கும் அளவுக்கு மாறியது. பல படங்கள் தங்களது விளம்பரங்களில், பாகுபலி போல பிரமாண்டமான படம் என்றும், பாகுபலியை விடவும் சிறந்த எடிட்டிங் செய்யப்பட்ட படம் என்றெல்லாம் விளம்பரம் செய்தார்கள்.

என்னதான் பிரமாண்டமான பொருட்செலவு இருந்தாலும், படத்தில் கதை இல்லை என்றால் படம் சுத்தமாக ஒர்க் அவுட் ஆகாது. ஆனால் பாகுபலி படத்தில் 10 நிமிடத்திற்கு ஒரு காட்சி ரசிகர்களை புல்லரிக்க வைக்கும் அளவுக்கு காட்சிகளை அடுக்கி இருப்பார் இயக்குநர் ராஜமௌலி. ராஜ விசுவாசியாக உள்ள சத்யராஜ் இளவரசன் அமரேந்திர பாகுபலியை ஏன் குத்திக் கொள்கிறார் என்ற மில்லியன் டாலர் கேள்வியோடு முதல் பாகத்தை முடித்து, இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டார்கள்.
வசூல் மழை: இது எல்லாம் ஒரு புறம் இருக்க படத்தில் மையக் கதாபாத்திரங்களாக நடித்த பிரபாஸ் மற்றும் ராணா ஆகியோர் இந்த படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் வேறு படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார்கள். முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 600 கோடிகள் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 2017ஆம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளியானது.

சாதனை: முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விடவும் இரண்டாம் பாகத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் படம் வணிக ரீதியாக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. பாகுபலி 2 மட்டும் உலகம் முழுவதும் ரூபாய் 1400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் இந்திய அளவில் ரூபாய் 1000 கோடிகள் வசூலைக் கடந்த முதல் திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.
10 ஆண்டுகள்: இந்நிலையில், பாகுபலி படம் வெளியாகி இந்த ஆண்டுடன் 10 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில் படம் குறித்த மாஸான அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது படம் வெளியாகி 10 ஆண்டுகள் அவதைத் தொடர்ந்து, படத்தின் இரண்டு பாகங்களையும் ஒன்றாக இணைத்து ஒரே படமாக வெளியிட போவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படம் அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
3டி: இந்த படத்திற்கு Baahubali The Epic என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகுபலி படத்தை தியேட்டரில் பார்க்க மிஸ் செய்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு திருப்தியைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் தரப்பில் படத்தை 3டி தொழில்நுட்பத்தில் வெளியிடச் சொல்லி கோரிக்கை வைத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











