நடிக்க விரும்பும் 'மிஸ் இந்தியா' பார்வதி

சமீபத்தில் மும்பையில் நடந்த மிஸ் இந்தியா 2008 அழகிப் போட்டியில் கேரள அழகி (இருப்பு: மும்பை) பார்வதி ஓமனக்குட்டன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
இந்தியாவில் லோக்கல் அழகிப் போட்டி முதல் மிஸ் இந்தியா, மிஸ் யுனிவர்ஸ், மிஸ் வேர்ல்ட் என எதில் வெற்றி பெற்றாலும் அடுத்த வேளையாக நடிக்க வந்து விடுவார்கள். ஓமனக்குட்டனும் அதற்கு விதி விலக்கில்லை. நடிக்க வாய்ப்பு வந்தால் தாராளமாக நடிப்பேன் என்று டிக்ளேர் செய்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய்தான் ஓமனக்குட்டனுக்கு முன்னோடியாம். ஐஸ்வர்யா உலக அழகிப் பட்டத்தை வென்றபோது பார்வதிக்கு ஜஸ்ட் 7 வயதுதானாம். அப்போதே நினைத்துக் கொண்டாராம், நானும் ஐஸ்வர்யா போல ஒரு நாள் உலக அழகி ஆவேன் என்று. அதற்கு முதல் படியாக உள்ளூரில் அழகிப் பட்டத்தை வென்றுள்ளார் பார்வதி.
கேரளம் பூர்வீகமாக இருந்தாலும், வளர்ப்பு எல்லாம் மும்பையில்தானாம். இங்குதான் பி.ஏ. படித்துள்ளார். சினிமா என்றால் உயிராம். ஒரு படம் விடாமல் பார்த்து விடுவாராம்.
இப்போது மிஸ் இந்தியா ஆகி விட்டதால் கண்டிப்பாக சினிமா வாய்ப்பு வரும். நல்ல கதையாக, நல்ல நடிகராக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்கிறார் பார்வதி.
நடிப்பு பிளஸ் மாடலிங்கோடு சைடில் எம்.பி.ஏ படிக்கவும் திட்டமிட்டுள்ளாராம் ஓமனக்குட்டன்.
பார்வதிக்கு இப்போது பெரும் கவலை என்னவென்றால், முன்பு போல வெளியில் நண்பர்களுடன் சுற்ற முடியாதே என்பதுதான். முன்பெல்லாம் நினைத்த இடத்திற்கு, நினைத்த நேரத்தில், இஷ்டத்திற்கு டிரஸ் செய்து கொண்டு போவேன், வருவேன். ஆனால் இனிமேல் அது முடியாதே என்கிறார் ஏக்கமாக.
அக்டோபர் 4ம் தேதி நடைபெறவுள்ள மிஸ் வேர்ல்ட் போட்டிக்கு இப்போது பார்வதி தயாராகிக் கொண்டிருக்கிறார். கண்டிப்பாக பட்டம் வெல்வேன் என்றும் நம்பிக்கையோடு கூறுகிறார்.
பார்வதி வெறும் அழகி மட்டுமல்ல, சமூகக் கவலையும் உடைய பொறுப்பான பெண்ணாகவும் இருக்கிறார். பெண் அடிமைத்தனம் போக வேண்டும், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஒழிய வேண்டும், சமத்துவம் வர வேண்டும், பெண் சிசுக் கொலை ஒழிய வேண்டும் என்று சமூக அக்கறையுடன் பேசுகிறார்.


Click it and Unblock the Notifications











