ஐயோ.. இன்னொரு டி.ராஜேந்தர்!

பேரரசு என்று சொன்னால் யாருக்கும் புரியாது. பன்ச் பேரரசு என்றால் பளீரென பலருக்கும் புரியும். காரணம், பேரரசுவின் படங்களில் அந்த அளவுக்கு பன்ச் வசனங்கள் பாய்ந்தோடும்.
இவரது படத்தில் சாதாரணமாக யாருமே பேச மாட்டார்கள். காதலைக் கூட முரட்டுத்தனமாகவே காட்டிப் பழக்கப்பட்டவர் பேரரசு. கத்திப் பேச வேண்டும் என முன்பே நிபந்தனைப் போட்டுத்தான் ஆர்ட்டிஸ்டுகளை புக் பண்ணுவார் போல.
காதுகளுக்குள் கம்பியை விட்டு ஆட்டுவது போல ஒரு 'எபக்ட்' பேரரசு பட வசனங்களைக் கேட்பவர்களுக்கு ஏற்படும்.
சில மருந்துகளைச் சாப்பிட்டால் 'சைட் எபக்ட்' வரும். ஆனால் பேரரசு படங்களில் 'சவுண்ட் எபக்ட்' பக்காவாக இருக்கும்.
சரி மேட்டருக்கு வருவோம். பேரரசு அடுத்து இயக்கப் போகும் படம் திருத்தணி. இதிலும் பரத்தான் ஹீரோ. ஹீரோயினாக நடிக்கவிருப்பவர் சுனேனா.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல், இயக்கம் என எல்லா முக்கிய பொறுப்புகளையும் பேரரசுவே கவனிக்கவிருக்கிறார். கூடுதலாக இசையையும் இவரே அமைக்கப் போகிறாராம்.
கூடிய விரைவில் ராஜேந்தர் இடத்தை பேரரசு பிடிக்கப் போவது நிச்சயம் என்று தெரிகிறது.
எனவே, திருத்தணி பார்க்கப் போகும் ரசிகப் பெருமக்கள் கூடவே, சாரிடான், அனாசின், நோவால்ஜின், டைகர் பாம் ஆகியவற்றையும் கொண்டு போனால் நலமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











