எல்லாவற்றுக்கும் காரணம் காங்கிரஸே-சீமான்

By Staff

Seeman
புதுச்சேரி: தமிழ் ஈழ மண்ணில் இன்று நடந்து கொண்டிருக்கும் அத்தனை துயரங்களுக்கும், தமிழினப்படுகொலைக்கும் காங்கிரஸ் கட்சியே முழு முதல் காரணம் என இயக்குநர் சீமான் கூறியுள்ளார்.

திரையுலக தமிழீழ ஆதரவு அமைப்பின் சார்பில் காங்கிரஸுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்ற தலைப்பில் பிரசாரக் கூட்டம் புதுச்சேரி பெரியார் திடலில் நடந்தது.

இயக்குநர்கள் சீமான், ஆர்.கே.செல்வமணி, கெளதமன், கவிஞர்கள் அறிவுமதி, சினேகன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் சீமான் பேசுகையில்,

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரு சக்திகளுக்கிடையே போர் நடக்கிறது. ஒன்று பணம். மற்றொன்று இனம். இனத்திற்காக ஒன்றும் செய்யாதவர்கள் தமிழினத்தின் முன் வாக்குக் கேட்டு வரும்போது ஒரு வாக்குக்கு 200, 300, 500 ரூபாய் கொடுத்து வென்றுவிட வேண்டும் என்று நினைத்து ஒரு தொகுதிக்கு 100 கோடி ரூபாய் வரை ஒதுக்கியிருக்கிறார்கள். இதுதான் கண்ணியமிக்க ஜனநாயகமா?.

தமிழ் சொந்தங்களின் குழந்தைகள் பசியால் வாடி சாகும்போது பால் கொடுக்க வராதவர்கள், வாக்குக் கேட்டு வரும்போது பணத்தைக் கொடுத்துவிட்டு பால் மீது சத்தியம் வாங்குகிறார்கள்.

தமிழச்சிகளின் மானத்தை காக்க சீலை கொடுக்காத நீங்கள், வாக்குகளை பொறுக்க சீலை கொடுக்கிறீர்களே? உங்களுக்கு வெட்கமில்லையா? அவமானமாக இல்லையா? அசிங்கமாக இல்லையா?.

கடந்த எத்தனையோ தேர்தல்களில் பல சிக்கல்கள் முன்னிறுத்தப்பட்டு தேர்தலை சந்தித்திருக்கிறோம். இந்தத் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டிருப்பது தமிழனின் உயிர் சிக்கல். தமிழனின் உணர்வை உரசினால் இந்த நிலைதான் ஏற்படும் என்பதை சொல்வதற்காக இந்தத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இன உணர்வுள்ள தமிழர்களே!, மான உணர்வுள்ள தமிழர்களே!

இந்த ஒருமுறை மட்டும் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள். கடந்த தேர்தல்களில் கட்சிக்காக வாக்களித்தீர்கள். சாதிக்காக வாக்களித்தீர்கள். மதத்திற்காக வாக்களித்தீர்கள். இந்த ஒருமுறையாவது கட்சி, சாதி, மதம், பணம் இவையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு கை சின்னத்திற்கு வாக்களிக்காமல் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

போற்றுதலுக்குரிய மருத்துவர் ராமதாஸ், அண்ணன் வைகோ, அருமைச் சகோதரர் திருமாவளவன், பொதுவுடமைக் கட்சிகளை சேர்ந்த தா.பாண்டியன், நல்லக்கண்ணு, து. இராஜா, இவர்களெல்லாம் தமிழீழம் ஒன்றுதான் தீர்வு என்று சொல்கிறார்கள். தமிழர்களின் வாழ்வு நல்லபடியாக அமைய வேண்டுமானால் தமிழீழம் ஒன்றுதான் தீர்வு ஒன்றுதான் என்று பெருமகள் ஜெயலலிதாவும் கூறியிருக்கிறார். அந்தச் சொல்லுக்காகத்தான் நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பரப்புரை செய்தோம்.

தமிழ் ஈழத்திற்கு எதிராக ஜெயலலிதா இருக்கும்போது அவரை விமர்சித்து முழங்கியவன் இந்த சீமான். தேர்தலுக்காக தமிழீழம் பற்றி பேசும் ஜெயலலிதா தேர்தலுக்குப் பிறகு பேச மாட்டார் என்று கூறுகிறார்கள். பேசட்டும், பேசமால் கூட போகட்டும் அவர்கள் தேர்தலுக்காகவாவது தமிழீழம் அமையும் என்று சொன்னார்கள். ஆனால், நீங்கள் தேர்தலுக்காகவாவது ஈழம் பற்றி பேசவில்லையே.

தமிழினத்தின் முன் பொய் சொல்லிவிட்டு யாரும் தப்பிக்க முடியாது. வேறொரு முறை வந்தால் அந்த மக்களை நாடி வந்தால் முன்பு சொல்லிவிட்டு செய்யாததை கேள்வி கேட்பார்கள், அதற்காக தண்டிப்பார்கள்.

ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் ஈழத்தை பெற்று த்தரக்கூட தேவையில்லை. 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் களமாடி அங்கு புதைந்துபோனார்கள். நெஞ்சில் உரமுள்ள மறத்தமிழர் பிரபாகரன் கட்டிய எழுப்பிய தேசிய போர்ப்படை மூலம் இழந்த தமிழீழ மண்ணை மீட்டெடுப்பார்கள். அதற்கு தடையாக இருப்பது ஒன்றே ஒன்று மட்டும்தான் புலிகள் மீதான தடை. புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கிவிட்டால் உலகமெல்லாம் நீக்கிவிடும்.

ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் அரிசி தரவேண்டாம், பருப்பு தரவேண்டாம், மண்ணெண்ணெய் தரவேண்டாம். ஒன்றே ஒன்றை மட்டும் செய்யுங்கள், புலிகள் மீதான தடையை நீக்குங்கள். அவர்களே ஈழத்தை வென்றெடுப்பார்கள்.

தமிழர்களே தமிழினத்திற்கு இந்தத் தேர்தலில் உண்மையாக இருந்து வாக்களியுங்கள். தமிழனின் மான உணர்வு செத்துப் போய்விடவில்லை என்பதைக் காட்ட கை சின்னத்தில் வாக்களிக்காதீர்கள். மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள்.

காங்கிரசுக்கு வாக்களிக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக செய்யப்படும் பரப்புரை மட்டுமல்ல இந்தக் கூட்டம், தமிழனின் உள்ள உணர்ச்சிகளை எழுப்புவதற்கான பரப்புரை கூட்டம் இது. ஒரு காக்கையின் மீது கல்லெறிந்தால் நூறு காக்கைகள் கத்துகின்றன.

ஒரு நாய் மீது கல்லெறிந்தால் அந்தப் பகுதிகளில் உள்ள அத்தனை நாய்களும் குரைக்கின்றன. வரிப்புலிகள் காக்கப்பட வேண்டும், கரடி இனம் அழிகின்றன அவை காக்கப்பட வேண்டும், வனவிலங்குகள் அழிக்கின்றன அவை காக்கப்பட வேண்டும் என்று கூறி காப்பகங்களை அமைத்து விலங்குகளை காக்கின்றனர். ஆனால், ஈழத்தில் சக மனிதன் சாகிறான். அதைத் தடுக்க உலகத்தில் உள்ள யாரும் முன்வரவில்லை.

இலங்கையில் தெருக்கள் தோறும் புத்தர் சிலைகள் சிரிக்கின்றன. அவற்றின் காலடியில் தமிழர்களின் பிணங்கள் கிடக்கின்றன. அங்கே தமிழனின் குருதி தெருக்களில் ஓடுகிறது. கறிக்கடை பக்கம் நாம் போகும்போது குருதி வாடை வீசுகிறது என ஒதுங்கிச் செல்கிறோம். ஆனால், அங்கே தமிழினம் உள்ள தேசத்தில் குருதி வாடை வீசுகிறது.

இந்தச் சூழ்நிலையில்தான் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பாக வாழ விரும்புகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. என் பாட்டன், அப்பன் வாழ்ந்த பூமியை அயலவன் அபகரிக்கக்கூடாது. என் தாயின் மடியில் மாற்றான் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அதை தடுப்பதற்காகத்தான் தமிழ் இளைஞர்கள் ஆய்தம் ஏந்தி போராடி வருகிறார்கள். இதனை பயங்கரவாதம் என்று எப்படி சொல்வது?.

பிரபாகரன் ஆயுதம் ஏந்தி போராடுகிறான். விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று கூறுகிறீர்களே? அவர்கள் எப்போது ஆயுதம் ஏந்தினார்கள்.

நான் இறந்தால் என் கண்கள் அப்படியே வைத்துப் புதைக்காதீர்கள். பார்வையற்ற யாருக்காவது அதனை பொருத்துங்கள். தமிழீழம் மலருவதை என் கண்களால் பார்க்கிறேன் என்று சொன்னான் குட்டி மணி.

ஆத்திரமடைந்த சிங்களவன், குட்டிமணியின் கண்களை பிடுங்கி தனது பூட்ஸ் காலால் மிதித்தான். இங்கு தமிழ்ப் பெண்களின் மார்புகள் கிடைக்கும் என்று எழுதி வைத்தவன்தான் சிங்களன்.

தமிழ்ப் பெண்களின் மார்புகளில் சிறீ என்ற சிங்கள எழுத்தை எழுதினான் சிங்களவன். இவற்றையும் கண்ட பிறகுதான் எந்த ஆயுதத்தை வைத்துக்கொண்டு தமிழ் இனத்தை சிங்களர்கள் வன்கொடுமை செய்கிறார்களே, அதே ஆயுதத்தை வைத்து எமது மக்களை காக்கப் போகிறேன் என்ற வைராக்கியத்தில் ஆயுதம் ஏந்தி தமிழீழ தேசியப் போர்ப்படையை உருவாக்கினான் பிரபாகரன். இப்போது எண்ணிப் பாருங்கள் பிரபாகரன் எந்த நிலையில் ஆயுதம் ஏந்தினான்.

இந்த உண்மையைச் சொன்னால் அதை பொறுத்துக் கொள்ளாத நீங்கள் எங்களை சிறையில் அடைக்கிறீர்கள். இது எந்த வகையில் நியாயம்?.

இலங்கை இறையாண்மை மிக்க நாடு என்று கூறும் தலைவர்களே, ஈராக்கில் மக்கள் செத்தபோது சிந்தை கலங்கி கதறியழுதோம். பாலஸ்தீனத்தில் குண்டு விழும்போது கதறியழுதோம்.

இதேபோலத்தான் பக்கத்து ஈழத்தில் சக மனிதன் சாவதை எண்ணி அழுகிறோம். அதனை மக்களுக்கு தெரியப்படுத்த பரப்புரை செய்து வருகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது.

பாலஸ்தீனத்தில் குண்டு விழும்போது பதறித் துடிக்கும் நீங்கள், பக்கத்து ஈழத்தில் குண்டு விழுந்து துடிக்கும் தமிழனுக்கு ஆதரவாக கேட்காதது ஏன்?.

ஈழத்தில் பிறந்த தமிழினம் செய்த பாவம் என்ன? அவர்கள் இத்தனை கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் 100 கிராம் சீனி கிடைக்கும். இப்படிப்பட்ட பொருளாதாரத் தடை ஏன்? அங்கு வாழும் ஒரு தலைமுறை மின்சாரத்தை காணாமல் வாழ்கிறதே ஏன்? இது இங்குள்ள தலைவர்களுக்குத் தெரியாதா?.

இலங்கை இறையாண்மை உள்ள நாடு அது ஒரு தனி தேசம். அங்கு நடப்பது பற்றி நான் பேசமுடியாது என்று கூறும் தலைவர்களை அப்புறம் அங்கு அமைதிப்படையை எப்படி அனுப்பினீர்கள்?

தமிழினத்திற்கு எதிராக எவன் பேசினாலும், எவன் செயல்பட்டாலும் கதி இதுதான் என்பதை சொல்வதற்காக தமிழர்களே இந்தத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். புலிகளை அழித்தொழித்துவிட்டு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தருவதாக ராஜபக்சே சொல்கிறான். பாதுகாப்பு வலயப் பகுதிக்கு வந்த தமிழ் மக்களுக்குச் சோறு கொடுத்தானா அவன்.

பாதுகாப்பு வலையப் பகுதிக்கு செல்ல அனுமதியுங்கள் என்று சொல்பவர்களே, அங்கு செல்பவர்களின் கதி என்ன? பரிசோதனை என்ற பெயரில் அங்கே உறவுகளுக்கு மத்தியிலே பெண்கள் நிர்வாணமாக நிறுத்தப்படுகிறார்கள். அந்த இடமா அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். அந்த மண்ணில் தமிழர்களுக்கு உடுத்த மாற்று உடையில்லை. பட்ட காயத்திற்கு போட மருந்து இல்லை.

பாதுகாப்பு வலையப்பகுதிக்கு வந்தவர்களுக்கு சிங்களவன் என்ன செய்து கொடுத்தான். அவன் செய்தது ஒன்றே ஒன்று மட்டும்தான். உறவுகளை சிதைத்து தனி சிறை வைக்கிறான். அப்படிப்பட்ட சூழலில் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்களுக்கு சமஉரிமை பெற்றுத் தரப்படும் என்று சொல்பவர்களே, போரை நிறுத்த முடியாத நீங்கள் தமிழர்களுக்கு சம உரிமை எப்படி பெற்றுத் தருவீர்கள்?.

காவிரி ஆற்று தண்ணீர், முல்லை ஆற்றுத் தண்ணீர் அண்டை மாநிலங்களில் இருந்து பெற்றுத் தராத நீங்கள், மீனவர்களின் சாவை தடுக்காத நீங்கள், ஈழத்தில் தமிழர்களுக்கு சமஉரிமை பெற்றுத் தருவேன் என்று கூறுவதை எப்படி நாங்கள் நம்புவது?.

60 ஆண்டுகளாக பல கொடுமைகளை அனுபவித்து வந்த தமிழர்கள், சிங்களவனோடு சகோதரனாக ஒன்றாக இரு என்று கூறுவது எப்படி சாத்தியம். ஈழத்தில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதா? அல்லது தனி நாட்டில் வாழ்வதா? என்பதை தீர்மானிக்க அந்த மண்ணில் பிறந்த தமிழனுக்கு மட்டும்தான் உரிமை உண்டு. மாறாக உலகத்தில் பிறந்த எந்தவொரு கொம்பனுக்கும் இல்லை.

சென்னைக்கு வந்த பிரதமர் சொன்னார், எல்லா நாடுகளிலுமிருந்து வந்து இந்தியாவில் ஆயுதப் பயிற்சி பெறுகிறார்கள். அப்படி என்றால், பாகிஸ்தானிலிருந்தும், சீனாவிலிருந்தும் இந்தியாவிற்கு வந்து பயிற்சி பெறுகிறார்களா? இலங்கை போர்ப்படைக்கு ஆயுதம் வழங்கியது பற்றி கேட்டால், 'பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்கியதாக'ச் சொல்கிறார். யாருடைய பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்கியிருக்கிறீர்கள். தமிழர்களிடமிருந்து தம்மை காத்துக் கொள்ள சிங்களவர்களுக்கு ஆய்தம் வழங்கினீர்களா?.

ஈழ மண்ணில் நடக்கும் அத்தனை கொடுமைகளுக்கும் முழு முதற் காரணம் காங்கிரஸ் கட்சிதான். ஆயுதம் தரவில்லை என்று சிதம்பரம் உள்ளிட்ட பலர் கூறுகிறார்கள். தமிழினத்திற்கு எதிரான போரில் நாங்கள் வெற்றி பெற்றதற்கு ஆயுத உதவி வழங்கிய இந்தியாவிற்கு நன்றி சொன்ன பொன்சேகா பேச்சுக்கு இங்குள்ளவர்கள் மறுப்பு சொல்லவில்லையே ஏன்?.

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், வெட்கமில்லாமல் போரை நிறுத்திவிட்டோம் என்று சோனியா பேசுகிறார். இந்த தேசத்தில் பிறந்த எனக்கு இந்த தேசம் செய்யும் தவறையும் சுட்டிக்காட்ட உரிமையுண்டு. நாங்கள் சொன்னால் பயந்துபோய் சிறை வைக்கிறீர்கள் என்றார் சீமான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X