வீரு தேவ்கனுக்கு ரூ. 50 லட்சம்-தமிழக அரசுக்கு உத்தரவு

இந்திப் பட இயக்குநர் வீரு தேவகன் 2003-ம் ஆண்டு ராஜு சச்சா என்ற இந்திப் படத்தை டைரக்டு செய்தார். இந்த படத்தில் அவருடைய மகன் அஜய் தேவகனும், மருமகளும் நடிகையுமான கஜோலும் நடித்தனர்.
இந்த படத்துக்கான படப்பிடிப்பு தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஊட்டியில் நடந்தது. மிகப்பெரிய அரண்மனை செட் போட்டு அந்தப் படத்தை எடுத்தனர்.
படப்பிடிப்பின் போது விதிமுறைகளை மீறியதாகவும் ஊட்டியின் சுற்றுச் சூழலுக்கு சேதத்தை ஏற்படுத்தியதாகவும் டைரக்டர் வீரு தேவகன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதற்காக தமிழக அரசு அவரிடம் ரூ.50 லட்சத்தை அபராதமாக வசூலித்தது.
இதனை எதிர்த்து வீரு தேவகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவருடைய மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. உடனே சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார் வீரு. நீதிபதிகள் சி.கே.தாகூர், லோகேஸ்வர்சிங் பட்னா ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினர்.
வீரு தேவகன் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு கூறிய தீர்ப்பு சரியல்ல என்றும் அவரிடம் தமிழக அரசு வாங்கிய ரூ.50 லட்சம் அபராதத் தொகையை அவரிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பை ஏற்பதா அல்லது மேல் முறையீட்டுக்குப் போவதா என்பது குறித்து இதுவரை தமிழக அரசு எந்த முடிவும் செய்யவில்லை.


Click it and Unblock the Notifications











