twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கம்ப ராமாயணம்: ஒரு கலைஞனின் 'அபார' சாதனை!

    By Staff
    |

    Sivakumar with wife
    இரண்டரை மணி நேரத்தில் எத்தனை கம்பராமாயணப் பாடல்களை விளக்கத்துடன் ஒரு சொற்பொழிவில் எடுத்துக் கூற முடியும்?.

    இந்தக் கேள்விக்கு பிரபல இலக்கிய சொற்பொழிவாளர் பேராசிரியர் சாலமன் பாப்பையா கூறிய பதில்: 'என்ன ஒரு அஞ்சு... இல்லன்னா ஆறு பாடல்களை ஒப்பிக்கலாம். அதுவே அதிகந்தான்!'

    ஆனால் ஒரு மனிதர், அதுவும் நடிகர் 100 கம்ப ராமாயணப் பாடல்களை, அதுவும் தேர்ந்தெடுத்த அழகான, அர்த்தமுள்ள பாடல்களை இரண்டரை மணி நேரங்களுக்குள் விளக்கத்துடன் சொல்லி முடித்துள்ளார். அதுவும் சாதாரணமாக அல்ல... மொத்த கம்பராயாணத்தையும், ஒரு கதையாக பேச்சுத் தமிழில் பொருத்தமான இடத்தில் அந்தப் பாடல்களைப் புகுத்தி கூறியுள்ளார்.

    யார் அவர்... நடிகர் சிவக்குமார்!!

    பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் கொண்ட கம்பராமாயணத்தின் கதையை இரண்டரை மணி நேரத்தில், அதுவும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்காமல் சொல்வது என்பது சாதாரண விஷயமா என்ன? அதுவும் கற்றறிந்தோர் மிக்க சபையில் கம்பனின் தமிழ்ச் சுவையையும், கவிச்சுவையையும் கொஞ்சமும் பிறழாமல் பேச்சுத் தமிழில் கொண்டுவந்திருக்கும் சிவக்குமாரின் திறன் எவரையும் பிரமிக்க வைக்கும்.

    கடந்த ஜனவரி 28ம் தேதி ஈரோடு வேளாளர் பெண்கள் கல்லூரியில், கம்பன் புனைந்த காவியத்திலிருந்து 100 பாடல்களை மேற்கோள் காட்டி கம்பராமாயண கதையை இரண்டரை மணி நேரத்தில் சொற்பொழிவாக நிகழ்த்திக் காட்டி அனைவரையும் விழிவிரிய வைத்தார் இந்த கலையுலக மார்கண்டேயன்.

    இந்த சொற்பொழிவுக்கு முன் சிவக்குமார் ஆற்றிய முன்னுரை ஒரு தனி இலக்கியம்!

    அதன் ஒரு பகுதி:

    மின்சார வசதியே இல்லாத ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன், நான். சின்ன வயதிலேயே அப்பாவை இழந்து, அம்மா வயலில் வேலை செய்து என்னை வளர்த்தார்கள். ஒரே சமயத்தில் 2 குழந்தைகளை படிக்க வைக்க முடியாது என்ற காரணத்தால், அக்காவின் படிப்பை நிறுத்திவிட்டு, என்னை மட்டும் படிக்க வைத்தார்கள்.

    அந்த கிராமத்திலேயே பள்ளி இறுதி வகுப்பு படித்து முடித்துவிட்டு, வெளியே வந்த முதல் ஆள் நான்தான். என் வாழ்க்கையில் அது ஒரு பரிமாணம்.

    சென்னை வந்து ஓவிய கல்லூரியில் படித்து, ஊர் ஊராக போய் ஓவியம் வரைந்தது, இன்னொரு பரிமாணம். திரையுலகில் நுழைந்து 30 வருடங்கள் நடித்தது, மற்றொரு பரிமாணம். சின்னத்திரையில் மிக நல்ல தொடர்களில் நடித்தது, அடுத்த பரிமாணம்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு எழுத்தின் மீதும், இலக்கியங்கள் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. 'இது ராஜபாட்டை அல்ல' என்ற புத்தகத்தை முதன்முதலாக எழுதினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், அதே புத்தகத்தின் பாகம்-2 எழுதினேன். இரண்டு புத்தகங்களும் மிக குறுகிய காலத்தில் விற்று தீர்ந்தன.

    கம்பராமாயணத்தை ஒரு வருடத்துக்கு முன்புதான் படித்தேன். எனக்கு 67 வயது ஆகிறது. இந்த வயதில் கம்பனைப் படித்து, அதையெல்லாம் ஒரு சொற்பொழிவாகத் தர முடியுமா என்ற தயக்கம் எனக்கு இருந்ததில்லை. அதனால்தான்
    ஈரோடு வேளாளர் கல்லூரியில் 5000 பேருக்கு முன்னால் முதன்முதலாக கம்பராமாயண சொற்பொழிவு நடத்தினேன். அதை, விஜய் டி.வி. வருகிற ஏப்ரல் 14ம் தேதி ஒளிபரப்புகிறது.

    100 பாடல்களை இரண்டரை மணி நேரத்தில் தண்ணீர் கூட குடிக்காமல், பிரேக் இல்லாமல் நான் சொற்பொழிவாற்றியதை சாதனை என்று புகழ்கிறார்கள். என்னுடைய இந்தச் சாதனையை கின்னஸூக்கு அனுப்பச் சொல்லி நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் நான் அதை விரும்பவில்லை. அதற்காக செய்த விஷயமல்ல இது.

    ஆத்மார்த்தமான ஒரு பணி. அதை நான் தனிப்பட்ட சாதனையாகச் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை என்றார் சிவக்குமார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X