டைரக்டர்கள் சங்கம் புதுமுடிவு
அனைத்து தரப்பும் கூடிப்பேசி சுமுகமான முடிவெடுங்கள் என்று முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, இயக்குநர்கள் சங்கத்துக்கு போட்டியின்றி அனைத்துத் தரப்பினரும் இடம்பெறும் வகையில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நிர்வாகிகளும், சீனியர் இயக்குநர்களும் முடிவெடுத்துள்ளனர்.
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவராக விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளார். இவரது பதவிக்காலம் முடியும் நிலையில் உள்ளது. புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த 11 ம் தேதி நடப்பதாக இருந்தது. தலைவர் பதவிக்கு பாரதிராஜாவும், முன்னாள் தலைவர் ஆர்.சி.சக்தியும் போட்டியிட்டனர்.
இந்நிலையில் நடிகரும் தமிழக அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனுமான ஜே.கே.ரித்தீஷின் ஆதரவாளர்கள் பாவா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நாளைய இயக்குநர்கள் சங்கம் எனும் அணியாக சில இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் இந்த தேர்தலில் போட்டியிட தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட வி.சேகர் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் மோகன் அறிவித்தார்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதியிடம் இந்த பிரச்னை குறித்து முறையிட்டனர். முதல்வரின் அறிவுரைப்படி நிர்வாகிகள் அனைவரும் நேற்று அவசர கூட்டம் நடத்தினர். இதில் நிர்வாகிகளை ஒருமனதாக தேர்வு செய்வது என்றும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஒருவேளை இதிலும் உடன்பாடு காண முடியாவிட்டால் மீண்டும் தேர்தல் நடத்துவது என முடிவெடுத்துள்ளனர். ஆனால் தேர்தல் மறு தேதி குறிப்பிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications











