ஆந்திராவைக் கலக்கும் தமிழ்ப் படங்கள்!
ஆந்திராவில் இப்போதைக்கு லாபகரமான விஷயம் நேரடியாக தெலுங்குப் படம் தயாரிப்பதல்ல. தமிழ்ப் படங்களை அப்படியே டப் செய்வதுதான்.
தமிழில் சமீபத்தில் வெளியான அவன் இவன் மற்றும் கோ ஆகிய இரண்டு படங்களின் வசூலும் அங்குள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு படங்களும் கடந்த இரு வாரங்களில் 16 கோடி ரூபாயை ஈட்டியுள்ளன.
பாலாவின் அவன் இவன் படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தெலுங்கில் வாடு வீடு என்ற பெயரில் வெளியிட்டார்.
தமிழில் சுமாராகப் போனாலும், தெலுங்கில் பி, சி சென்டர்களில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது இந்தப் படம்.
அதேபோல ஜீவா நடித்த கோ படம் ரங்கம் என்ற பெயரில் வெளியானது. பாடல்கள், கண்ணைக்கவரும் லொகேஷன், மேக்கிங் ஸ்டைல் என இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததால் நல்ல வசூல் கிடைத்துள்ளது.
தமிழ்ப் படங்களின் ஓட்டத்தைப் பார்த்த தெலுங்கு சினிமா விநியோகஸ்தர்கள், இனி இந்த மாதிரி டப்பிங் படங்களுக்கான வரியை கணிசமாக உயர்த்த வேண்டும் என கொடிபிடிக்க ஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











