தியேட்டர் கிடைக்கலே... ரிலீஸ் பண்ண நான் பட்டபாடு....! - குமுறும் 'கேப்டன்'
'நாம எடுத்த படம் நல்லபடியா ரிலீஸ் ஆனா போதும்... தடைபடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக பல்லைக் கடித்துக் கொண்டு கிடைத்த தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணேன்', என்றார் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்.
விஜயகாந்த் முதல்முறையாக இயக்கியுள்ள படம் விருதகிரி. அவர்தான் ஹீரோ. நல்ல போலீசாக, ஆஸ்திரேலியாவையே கலக்கும் அதிரடி ஐபிஎஸ் ஆபீசராக நடித்துள்ளார் அவர்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியானது. ஆனால் படத்துக்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று விஜயகாந்த் புகார் கூறி வந்தார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி சென்னை 4 பிரேம்ஸ் திரையரங்கில் நடந்தது. இந்தக் காட்சிக்கு விஜயகாந்தும் வந்திருந்தார்.
காட்சி முடிந்த பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் கூட நான் பல பிரச்சினைகளை எதிர்கொண்டேன். நிம்மதியாக படம் எடுக்க விடவில்லை. கர்நாடகா, ஆந்திரா, வெளிநாடு என மாத்தி மாத்தி எடுக்க வேண்டி வந்துச்சி.
ரிலீஸ் பண்ண பட்ட பாடு இருக்கே... இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். தமிழ் சினிமாவில் யாரும் வந்து சுதந்திரமாகப் படமெடுத்து ரிலீஸ் பண்ணும் நிலை இல்லை. நல்ல படங்களை ஓட விடமாட்டேங்குறாங்க... சென்னையில்கூட எனக்கு வழக்கமா கிடைக்கிற தியேட்டர்கள் கிடைக்கல...", என்றார்.


Click it and Unblock the Notifications











