விபத்தில்லாத தீபாவளி - போலீஸ் தயாரித்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்

இந்த வீடியோவை பல்வேறு டிவி சானல்களில் இலவசமாக ஒளிபரப்பவுள்ளனர்.
வளர்மதி பிரியா என்பவர் இந்த வீடியோ படத்தை இயக்கியுள்ளார். ஏராளமான சிறார்கள் இதில் நடித்துள்ளனர். இந்த படத்தில், பட்டாசுகளை வெடிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். நமக்கும், மற்றவர்களுக்கும் காயம் ஏற்படாத வகையில் கவனமாக இருக்க வேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகிறார்.
இதுகுறித்து கூடுதல் டிஜிபி ஆர்.நடராஜ் கூறுகையில், ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் கேமரா, விளக்குள் உள்ளிட்ட பிற வசதிகளைச் செய்து கொடுத்து உதவினர். எடிட்டிங் முடிந்த பின்னர் இதை டிவிடி முறையில் மாற்றி அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளோம். அனைத்து தியேட்டர்கள், உள்ளூர் கேபிள் டிவிக்கள் மூலம் இது இலவசமாக ஒளிபரப்பப்படும் என்றார் அவர்.
ஹைதராபாத்தில் வெள்ள நிவாரண நிகழ்ச்சி...
இந் நிலையில் ஆந்திரத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தையடுத்து நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்ட சிறப்பு நிகழ்ச்சியை ரஹ்மான் நடத்தவுள்ளார்.
இது குறித்து ரஹ்மான் கூறுகையி்ல், ஆந்திர வெள்ள நிவாரண பணிகளுக்காக வரும் 24ம் தேதி ஹைதராபாத்தில் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஹைதராபாத் விமான நிலையத்தில் நடைபெறும். நிகழ்ச்சிக்கு 'ஜெய்ஹோ' என பெயர் வைத்துள்ளோம்.
இதில் சித்ரா, சாதனா சர்கம், பொன்னி தயால், ஸ்வேதா பண்டிட் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இதில் வசூலாகும் தொகை ஆந்திர முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் என்றார்.
ஹைதராபாத் நிகழ்ச்சி குறித்து ஆந்திர விமான நிலைய அதிகாரி ஸ்ரீபதி கூறுகையில், ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி நினைவாக ஏஆர் ரஹ்மான் ஒரு பாடலை உருவாக்கி பாடவிருக்கிறார் என்றார்.
நடிகர்-நடிகைகள் கலை நிகழ்ச்சி:
அதே போல வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்ட தெலுங்கு நடிகர்-நடிகைகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் ஹைதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., பாலகிருஷ்ணா, ராஜசேகர், மோகன்பாபு, நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், ஜீவிதா, விஜயநிர்மலா மற்றும் டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஹைதராபாத்தில் 7ம் தேதி நட்சத்திர கலை இரவு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் அனைத்து நடிகர்- நடிகைகளும் தவறாது கலந்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதி முதல்வரின் மந்திரி நிவாரணநிதிக்கு வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications











