ரஜினி-அரசியல்: குசேலன் வசனம் நீக்கம்!

ரஜினிகாந்த்-நயனதாரா நடிப்பில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் குசேலன் படத்தில் ஆர்.சுந்தரராஜன் ரஜினியிடம் கேள்விகள் கேட்பது போலவும், அதற்கு ரஜினி பதிலளிப்பது போலவும் ஒரு பகுதி உள்ளது.
அதில், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா, மாட்டீர்களா என்று சுந்தரராஜன் கேட்பார். அதற்கு ரஜினி, நான் அரசியலுக்கு வருவது தொடர்பாக பேசிய வசனங்களை வசனகர்த்தா எழுதினார். அதை நான் பேசினேன். அதை ஏன் பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்று பதிலளிப்பார்.
இந்த வசனம் ரஜினி ரசிகர்களுக்கு மனத்தாங்கலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த கேள்வி, பதிலை படத்திலிருந்து நீக்கி விட முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
தனது விமர்சகர்களுக்கு ரஜினி பதிலளிக்கும் தொணியில் இந்த கேள்வி - பதில் வைக்கப்பட்டது. ஆனால் ரஜினியின் பொத்தாம் பொதுவான பதிலாக இதை மீடியாக்கள் கொண்டு சேர்த்து விட்டதால், இந்த வசனத்தை நீக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணன் வெளியிட்ட பேக்ஸ் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் 'தப்பித்த' குசேலன்:
தமிழகத்தில் ரஜினியின் குசேலன் பற்றி பலவிதமான தகவல்கள் வந்தாலும் கேரளாவில் இந்தப் படம் நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளதாக வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் இந்தப் படம் 85 திரையரங்குகளில் வெளியானது. இரண்டாவது வார முடிவில் இந்தப் படத்தின் வினியோகஸ்தர்களுக்கு கணிசமான லாபம் கிடைத்திருப்பதாக தகவல்கள் வருகி்ன்றன.
முதல் வார நிலவரப்படி இந்தப் படம் கேரளாவின் அனைத்து சென்டர்களிலும் ரூ. 2.16 கோடி வசூலித்துள்ளது.
பத்திரிகைகளின் விமர்சனங்கள் இந்தப் படத்தின் கேரள வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. உண்மையில் கேரள மீடியாவில் இந்தப் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன என்கிறார் பிரமிட் சாய்மிரா இயக்குனர்.
இதே போல இந்தப் படத்தின் வெளிநாட்டு விநியோகஸ்தர்களில் நாக்ரவி தவிர, மற்றவர்கள் நல்ல லாபம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இன்னமும் இந்தப் படம் ஓடிக் கொண்டுள்ளது.
ஆனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகத்தில் படத்தின் வசூல் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.


Click it and Unblock the Notifications











