ரஹ்மானின் இசைப் பள்ளி ஆரம்பம்

இந்தியா முழுவதும் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த ஏ.ஆர்.ரஹ்மான் கே.எம்.மியூசிக் கன்சர்வேட்டரி என்கிற தனது கனவு இசைப் பள்ளி குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். தற்போது இதற்கு முழு உருவம் கிடைத்து வகுப்புகள் தொடங்கவுள்ளன. 150 மாணவர்களுடன் ஜூன் மாதம் முதல் இந்தப் பள்ளி செயல்படத் தொடங்குகிறது.
செய்தியாளர்களிடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்தப் பள்ளி குறித்து விவரித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஆப்பிள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆடியோ மீடியா எஜுகேஷன் நிறுவனத்துடன் இணைந்து இந்த இசைப் பள்ளி செயல்படவுள்ளது. வாத்திய இசை, வாய்ப்பாட்டு (இந்தியன் மற்றும் மேற்கத்திய இசை), இசை தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து இங்கு பாடம் நடத்தப்படும்.
தொடக்கத்தில் இசை தொழில்நுட்பம், குரல் வளம், கீ போர்ட் (பியானோ மற்றும் எலக்ட்ரானிக் கீ போர்ட்) ஆகியவற்றில் பாடம் நடத்தப்படும்.
இதைத் தொடர்ந்து ஒலி நுட்பம், இசைக் கலை உள்ளிட்டவை படிப்படியாக பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.
இசைத் தொழில்நுட்பம் குறித்த அறிவை மேம்படுத்திக் கொள்வதுதான் இந்த இசைப் பள்ளியின் முக்கிய நோக்கம் என்கிறார் ரஹ்மான்.
தற்போது தயார் நிலை, அடிப்படை மற்றும் டிப்ளமோ என மூன்று நிலைகளில் இங்கு பாடம் நடத்தப்படும். இசையறிவும், இசை குறித்த ஆர்வமும் உள்ள அனைவரும் இதில் சேரத் தகுதி உடையவர்கள். தொடக்க நிலையிலிருந்து உயரிய நிலை வரைக்கும் இசையைக் கற்றுக் கொள்ள இந்தப் பள்ளி வாய்ப்பு வழங்குகிறது. தேவையான மாணவர்களுக்கு தங்கும் வசதியும், சாப்பாடு வசதியும் கூட ஏற்பாடு செய்து தரப்படுமாம்.
கே.எம். கன்சர்வேட்டரி இசைப் பள்ளியின் முக்கிய ஸ்பான்சரான ஏ.ஆர்.ரஹ்மான் பவுண்டேஷன், வசதியற்ற மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தரவும் திட்டம் வைத்துள்ளது.
எதிர்காலத்தில் கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரிக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெறுவது குறித்து சென்னை பல்கலைக்கழகத்துடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறதாம். இதன் மூலம் இசை மற்றும் இசைத் தொழில்நுட்பத்தில் இளநிலை பட்ட வகுப்புகளை நடத்த முடியும்.
கோடம்பாக்கத்தில் உள்ள ரஹ்மானின் ஸ்டுடியோவுக்கு அருகிலேயே இசைப் பள்ளி செயல்படவுள்ளது. அடுத்த ஆண்டு முதல் சென்னைப் புறநகரில் இதற்காக ரஹ்மான் வாங்கிய 3 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு வரும் நவீன கட்டடத்தில் இசைப் பள்ளி செயல்படும். இங்கு வகுப்பறைகள், இசை கச்சேரி அரங்கம், ரெக்கார்டிங் ஸ்டுடியோ, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படவுள்ளது.
இந்த இசைப் பள்ளியின் நிறுவனராக மட்டுமல்லாமல் முதல்வராகவும் ரஹ்மான் செயல்படுவார்.
இந்த இசைப் பள்ளி தவிர, மேற்கத்திய முறையிலான சிம்பொனி இசைக் குழு ஒன்றையும் ரஹ்மான் நிறுவுகிறார். இந்த இசைக் குழு ரஹ்மானின் சொந்த ட்யூன்களைக் கொண்டு உருவாக்கப்படும் பாடல்களை இசைத் துறைக்கு வழங்கும். மேலும் சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கும் பயணித்து இசை நிகழ்ச்சிகளை வழங்கும்.
சர்வதேச தரத்திலான இசைக்கலைஞர்கள் ஊதியத்துடன் இந்த இசைக் குழுவில் பணியமர்த்தப்படுவர். இந்தியக் கலைஞர்கள் மட்டுமல்லாமல் சர்வதேச இசைக் கலைஞர்களும் இந்த இசைக் குழுவில் இடம் பெறுவர். இவர்களில் சிலர் இசைப் பள்ளியிலும் வகுப்பு எடுப்பார்கள்.
இந்த இசைப் பள்ளியில் பயில உரிய அளவிலான கட்டணமே வசூலிக்கப்படவுள்ளதாகவும் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரம் அறிய http://www.arrahman.com/ என்ற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











