'ராணா'வுக்காக கேளம்பாக்கத்திலேயே தனி அலுவலகம் அமைக்கும் ரஜினி!
ரஜினி திரும்பி வந்துவிட்டார், முன்னிலும் உற்சாகமாகவும், பொலிவுடனும். அவரைப் பார்க்க கஷ்டப்பட்டு முட்டி மோதி, போலீஸிடம் அடியெல்லாம்பட்டாலும், இந்த ஒரு விஷயத்துக்காகவே வந்திருந்த ரசிகர்கள் தங்களுக்கு நேர்ந்த கஷ்டத்தைப் பெரிதுபடுத்தவில்லை.
அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதில் அவர்கள் கவனம் திரும்பிவிட்டது.
ரஜினியின் இப்போதைய உடனடி கவனம் ராணாதான். அதற்கு முன் ஒரு மாதம் தன்னை முழுமையான ஃபிட்னஸுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்குகிறார்.
காரணம் இந்தப் படத்தின் கதை ரஜினியுடையது. திரைக்கதையை இயக்குநர் ரவிக்குமாருடன் இணைந்து செதுக்கியிருப்பவரும் அவரே.
பெரிய பட்ஜெட் படம் என்பதால், எந்திரனை விட மிகப் பிரமாண்ட வெற்றியை ராணா பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்கேற்ப முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராணாவுக்கான எதிர்ப்பார்ப்பு பெருகியுள்ளது.
இதையெல்லாம் மனதில் கொண்டு, ராணாவில் புதிய அம்சங்களைச் சேர்ப்பது, இருக்கிற காட்சியமைப்புகளை சரி செய்வது என ரஜினியின் ஒரு மாத கால ஓய்வு கழியப்போகிறது.
தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டிலேயே புது அலுவலகம் திறந்து இயக்குநர் ரவிக்குமார் மற்றும் முக்கிய கலைஞர்களுடன் படத்தை சிறப்பாக உருவாக்க ஆலோசனைகள் மேற்கொள்ளவிருக்கிறார்.
இன்னும் சில தினங்களில் ரஜினியைச் சந்தித்து உடல் நலம் விசாரிக்க தீபிகா படுகோனேயும் இங்குவர இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











