ஈழம்: போராட்டத்துக்கு ஆதரவு மட்டுமே-ராமேஸ்வரத்துக்கு வருவது கஷ்டம்- சரத்

இலங்கையில் போர் எனும் பெயரில் அப்பாவி தமிழர்களை ராணுவம் கொன்று குவிப்பதைக் கண்டித்து, தமிழ் திரையுலகம் சார்பில் ராமேசுவரத்தில் வருகிற 19-ந் தேதி கண்டன ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெறும் என்று இதில் நடிகர்-நடிகைகள் உள்பட தமிழ் திரை உலகினர் திரளாக கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள், தொழிலாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
நடிகர் சங்கம் ஆலோசனைக் கூட்டம்
இதுகுறித்து ஆலோசனை செய்ய தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் நடிகைகளின் அவசர கூட்டம் நேற்று மாலை கூட்டப்பட்டது. சங்கத்தின் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். ஏறத்தாழ நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.கூட்டத்துக்குப் பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கை தமிழருக்கு ஆதரவாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள போராட்டத்துக்கு நடிகர் சங்கத்தின் தார்மீக ஆதரவு உண்டு. ஆனால் 19-ந் தேதி ராமேசுவரத்தில் நடைபெறும் கண்டன ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் நடிகர் நடிகைகள் கலந்து கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளன.
இந்த போராட்டம் சென்னையில் நடைபெற்றால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நடிகர்-நடிகைகள் அனைவரும் முழுமையாகக் கலந்து கொள்வார்கள்.
பாதுகாப்பு சிக்கல்கள்
ஆனால் ராமேஸ்வரம் என்பதால் பாதுகாப்பு சிக்கல்கள் உள்ளன. ஆனால் அதற்காக சென்னையில் நாங்கள் தனியாக போராட்டம் நடத்த மாட்டோம். கலைக்குடும்பம் ஓரணியில் நின்று போராட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். தனித் தனி போராட்டம் தேவையில்லை. நடிகர் நடிகைகளின் பாதுகாப்பு மற்றும் போய்வருவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருதியே இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது, என்றார் சரத்குமார்.
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று (அக்டோபர் 14) நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தான் கலந்து கொள்ள இருப்பதாகவும் அப்போது சரத்குமார் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











