பிள்ளைகளுக்கு சிவக்குமாரின் கோரிக்கை!

ஆண்டுதோறும் ப்ளஸ்டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவிகளுக்கு தனது சிவகுமார் அறக்கட்டளை மூலம் கடந்த 28 ஆண்டுகளாக உதவித் தொகைகளை வழங்கி வருகிறார் நடிகர் சிவக்குமார்.
தற்போது சிவக்குமார் அறக்கட்டளை தனது 29-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆண்டு 3 லட்சம் ரூபாய் ஊக்கப் பரிசுகளை வழங்கினார் சிவக்குமார்.
பரிசுத் தொகையை வழங்கிய பின்னர் சிவக்குமார் பேசியதாவது;
நான் சின்ன வயதில் தந்தையை இழந்து படிக்கவே வழியின்றி பட்ட கஷ்டங்களின் விளைவுதான் இப்போது வழங்கப்படும் ஊக்கப் பரிசுகள்.
நான் படிக்க வேண்டும் என்பதற்காகவே தன் படிப்பை 3-ம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார்கள் என் அக்கா. என் படிப்புச் செலவுக்காக என் அம்மா 7 வருடங்கள் வெறும் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு கடனை அடைத்தார்கள்.
சென்னையில் தங்கிப் படித்த காலத்தில் குளிக்க சோப் வாங்கக் கூட வழியில்லாமல் தவித்த நாட்கள் எத்தனையோ...
என்னைப் போன்ற ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்களை தமிழகம் முழுக்க தேடிப் பிடித்து உதவி செய்து வருகிறேன். இதில் ஒரு தனி மன நிறைவு.
இந்நேரத்தில் மாணவ, மாணவியருக்கு ஒரே ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன்.
எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் தாய் தந்தையரை முதியோர் இல்லங்களில் சேர்த்து, அவர்களின் பாசத்தைக் கேவலப்படுத்தி விடாதீர்கள். பின்னர் இந்த நிலைதான் வழிவழியாக உங்களுக்கும் தொடரும் என்றார்.
சூர்யா
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அவர் பேசுகையில், 29 வருடங்களாக அப்பா செய்துவரும் சேவையைப் பார்த்துதான் அகரம் பவுண்டேஷனைத் தொடங்கினேன். இந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறேன்.
அன்பு குமார் என்ற மாணவர் தமிழக அரசின் ஆதிதிராவிட நலப் பள்ளியில் படித்து தமிழக அளவில் முதலிடம் பெற்று இப்போது மருத்துவக் கல்லூரியிலும் இடம் பெற்றுள்ளார். அவருக்கான மொத்த படிப்புச் செலவையும் அகரம் அறக்கட்டளை ஏற்கிறது என்றார்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கே.ஈ.ஞானவேல்ராஜா வரவேற்றார். த.செ.ஞானவேல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.


Click it and Unblock the Notifications











