ஆமிர் அதிருப்தி?-முருகதாஸ் விளக்கம்

தமிழில் சூர்யாவை வைத்து இயக்கி பெரிய வெற்றியைப் பெற்ற கஜினி திரைப்படத்தை, அதே பெயரில் இந்தியில் இயக்கி வருகிறார் ஏஆர் முருகதாஸ்.
இந்தப் படத்தின் பட்பபிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராகிக் கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் 1250 பிரிண்டுகளுடன் இந்தப் படம் வெளியாகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த ஆமிர்கான் அதிருப்தியில் உள்ளதாகவும், பல காட்சிகளை மறுபடியும் நன்றாக எடுக்க வேண்டும் என முருகதாசிடம் கோபமாகக் கூறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், ரீஷூட் நடத்த தேதிகேட்டு ஆசினிடம் போனபோது, அவர் தேதிகள் ஒதுக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்த விளக்கத்தை தெரிவித்துள்ளார் முருகதாஸ். அவர் கூறியிருப்பதாவது:
கஜினி ஷூட்டிங் முடிந்து விட்டது. படத்தைப் பார்த்த ஆமிர் கான் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளதாகப் பாராட்டினார். ரீ ஷூட் செய்யச் சொன்னதாக வந்த தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. நாங்கள் தேதி கேட்டு ஆசின் மறுத்துவிட்டார் என்பதும் உண்மையற்ற செய்திதான்.
லண்டன் ட்ரீம்ஸ் ஷூட்டிங்குக்காக ஆசின் லண்டன் சென்றிருந்தார். அதனால் ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருந்தது. அதை இப்போது படமாக்கப் போகிறோம். இதற்காக சில தினங்களை ஒதுக்கித் தந்துள்ளார் ஆசின்.
படத்துக்கான பின்னணி இசைச் சேர்க்கும் வேலை சென்னையில் நடக்கிறது. பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளன. இரண்டு பாடல்களை மும்பையில் ஒரு எப்எம் மூலம் ஒளிபரப்பினோம். மிகப்பெரிய வரவேற்பு அவற்றுக்குக் கிடைத்துள்ளது. முறையான இசை வெளியீடு இன்னும் சில தினங்களில் நடக்கிறது.
இந்தி சினிமா வரலாற்றில் அதிக பிரிண்டுகளுடன் வெளியாகும் படம் கஜினிதான். மொத்தம் 1250 பிரிண்டுகள். உலகம் முழுவதும் ஒரே நாளில் வெளியீடு.
இந்தப் படத்தையடுத்து ஒரு தமிழ்ப் படம்தான் இயக்கப் போகிறேன். ஆனால் நடிகர் நடிகைகள் யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் முருகதாஸ்.
இந்தி கஜினிக்குப் பின் சூர்யாவை வைத்து படம் இயக்குவதாகத்தான் முருகதாஸ் கூறிவந்தார். ஆனால் இப்போது நாயகன்- நாயகி முடிவாகவில்லை எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











