ஸ்டார் நைட் நிகழ்ச்சிக்குப் போகாத நயனதாரா, சினேகாவுக்கு நோட்டீஸ்
ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்த வெள்ள நிவாரண நிதி திரட்டும் நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் பங்கேற்காத சினேகா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளுக்கு தெலுங்கு திரையுலகம் சார்பில் நடிகர் பாலகிருஷ்ணா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆந்திராவில் சமீபத்தில் ஏற்பட்ட புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தெலுங்கு திரையுலகம் நடிகர் பாலகிருஷ்ணா தலைமையில் ஒரு குழு அமைத்து, நட்சத்திர கலைநிகழ்ச்சி நடத்தியது.
இதில் தெலுங்கு படங்களில் நடிக்கும் நடிகர்-நடிகைகள் அனைவரும் தவறாமல் கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று பாலகிருஷ்ணா வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
அதன்படி, கடந்த 7-ந் தேதி ஹைதராபாத்தில் மிக பிரமாண்டமான முறையில் நட்சத்திர கலைநிகழ்ச்சி நடந்தது. அதில், ரஜினிகாந்த் உள்பட தமிழ்-தெலுங்கு பட உலகை சேர்ந்த நடிகர்-நடிகைகளும், பிரமுகர்களும் ஏராளமான அளவில் கலந்துகொண்டார்கள்.
நயன்தாரா-சினேகா
அந்த கலைநிகழ்ச்சியில் நடிகைகள் நயன்தாராவும், சினேகாவும் கலந்து கொள்ளவில்லை. இருவருமே தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகிகளாக இருக்கிறார்கள்.
ஆந்திரா வெள்ள சேதத்துக்காக நடந்த கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதது ஏன்? என்று விளக்கம் கேட்டு, நயன்தாரா-சினேகா ஆகிய இருவருக்கும் நடிகர் பாலகிருஷ்ணா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
2 பேரும் தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெலுங்கு பட அதிபர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இதன் முதல் கட்டமாகத்தான் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











