நடிகர், நடிகைகளுடன் திட்டமிட்டபடி ராமேஸ்வரத்தில் ஊர்வலம்-ராம நாராயணன்

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் ராணுவ தாக்குதல்களையும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதல்களையும் கண்டித்து தமிழ் திரையுலகம் சார்பில் ராமேஸ்வரத்தில், வரும் 19ம் தேதி திரையுலகம் சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூட்டிங்குகள் 3 நாட்கள் ரத்து:
இதற்காக அக்டோபர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. பட தயாரிப்பு தொடர்பான எந்த வேலைகளும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பின் வாங்கும் நடிகர் சங்கம்:
ஆனால் இந்தப் போராட்டத்தில் ராமேஸ்வரம் போய் கலந்து கொள்வது நடிகர்-நடிகைகளுக்கு சாத்தியமா என நடிகர் சங்க அவசரக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் பேசிய சங்கத் தலைவர் சரத் குமார், இந்தப் போராட்டத்தில் ராமேஸ்வரம் போய் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மட்டும் போகலாம். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் நடிகர் நடிகைகள் அனைவரும் ராமேஸ்வரம் போக முடியாது. இருந்தாலும் போராட்டத்துக்கு முழு ஆதரவு உண்டு. சென்னையில் இந்தக் கூட்டம் நடந்தால் அனைவரும் கலந்து கொள்வோம் என்றும் கூறினார்.
நடிகர்-நடிகைகளின் இந்த தீர்மானம் பற்றி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் கூறுகையில்,
இலங்கை அரசை கண்டித்து தமிழ் திரையுலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் திட்டமிட்டபடி, ராமேஸ்வரத்தில் வருகிற 19-ந் தேதி நடக்கும். இந்த போராட்டத்தில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், திரைப்பட தொழிலாளர்கள் உள்பட அனைத்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்வார்கள்.
ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில்:
இதற்காக, 1,000 பேர் அமரக்கூடிய வகையில், ஒரு தனி ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரிலிருந்து 18ம் தேதி மாலை 3 மணிக்கு ரயில் புறப்படும். மறுநாள் அதிகாலை ராமேஸ்வரத்தை அடையும். அங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் அனைவரும் தங்குவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
19ம் தேதி பிற்பகலில், ராமேஸ்வரத்தில் ஊர்வலம்- பொதுக்கூட்டம் நடைபெறும். பொதுக் கூட்டத்தில், திரையுலக பிரபலங்கள் அனைவரும் பேசுவார்கள். கூட்டம் முடிந்த பின், அன்று இரவு 7 மணிக்கு தனி ரயில் சென்னைக்கு புறப்படும். 20ம் தேதி காலையில் அனைவரும் சென்னை வந்து விடுவோம்.
இதற்கான அரசு அனுமதி பெறுவதற்காக டைரக்டர் பாரதிராஜா, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் ஆகிய இருவரும் தலைமை செயலாளரை சந்தித்து பேசி, மனு கொடுத்தார்கள். அரசு அனுமதியும் அளித்துவிட்டது.
ராமேஸ்வரத்தில் பாரதிராஜா...
ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக பாரதிராஜாவும், சில தயாரிப்பாளர்கள்- டைரக்டர்களும் நேற்று அங்கு சென்றுவிட்டனர். எனவே திட்டமிட்டபடி, ராமேஸ்வரத்தில் போராட்டம் நடைபெறும் என்றார் ராம நாராயணன்.


Click it and Unblock the Notifications











