அமெரிக்கா: விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட ஷாரூக் கான்!

பெயரில் 'கான்' என்ற வார்த்தை இருந்ததால் இந்தி நடிகர் ஷாரூக் கானை விமான நிலையத்திலேயே தடுத்து வைத்தனர் அமெரிக்க நிலைய அதிகாரிகள்.
கடந்த சில மாதங்களுக்கு முன் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமை, அவரது தகுதி மற்றும் சிறப்பு அந்தஸ்து எதையும் கருத்தில் கொள்ளாமல் இந்திய மண்ணிலேயே கான்டினென்டல் விமான பணியாளர்கள் தடுத்து நிறுத்தி சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தினர்.
இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்ட பிறகே, அந்த விமான நிறுவனத்தினர் மன்னிப்பு கேட்டனர். ஆனாலும் தங்கள் நடவடிக்கையில் எந்தத் தவறும் இல்லை என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தினர்.
இந்த விவகாரம் அடங்கும் முன்பே, இன்னொரு இந்திய விஐபியான ஷாருக்கை அவமானப்படுத்தியுள்ளனர். இது நடந்தது அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் உள்ள நெவார்க் விமான நிலையத்தில்.
அமெரிக்காவில் நடக்கும் தெற்காசிய சமூகத்தினரின் நிகழ்ச்சி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான்.
நெவார்க் விமான நிலையத்தில் இறங்கிய அவரை அந்த விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவருடன இருந்த காங்கிரஸ் எம்பி ராஜீவ் சுக்லா தலையிட்டு எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவரை விடவில்லை.
பின்னர் இந்தியத் தூதரகம் தலையிட்ட பிறகே அவரை விடுவித்துள்ளனர்.
கம்ப்யூட்டரில் ஷாரூக் கான் பெயர் மின்னிய உடன் அவர் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதியில்லை என்று கூறி தடுத்து நிறுத்தி தனி அறையில் அமர வைக்கப்பட்டார்.
இதுகுறித்து ராஜீவ் சுக்லா கூறுகையில், அமெரிக்க அதிகாரிகள் செய்தது நிச்சயம் நியாயமான செயலே அல்ல. அவர்கள் தங்கள் பாதுகாப்புச் சோதனை முறைகளுக்கு ஒரு சரியான வரையறை வைத்துக் கொள்வது நல்லது.
ஷாரூக் கான் தடுக்கப்பட்டதும், நான்தான் உதவிக்குப் போனேன். அங்கு நான் சொன்ன விளக்கத்தை பெரும்பாலான அதிகாரிகள் ஏற்றுக் கொண்டாலும், ஒரு அதிகாரி மட்டும் மிகப் பிடிவாத இருந்தார். நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் மற்றும் அதில் சிறப்பு விருந்தினரே ஷாரூக் தான் என்று கூறியும் அவர் ஏற்றுக் கொள்ளவே இல்லை.
இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது. டாக்டர் அப்துல் கலாம், ஷாரூக்கான் போன்றவர்களை தொடர்ந்து இத்தகைய அவமானத்துக்கு அமெரிக்க அதிகாரிகள் உள்ளாக்குவது பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல என்றார்.


Click it and Unblock the Notifications











