ஸ்பீல்பெர்க்-அனில் அம்பானி 825 மில்லியன் டாலர் ஒப்பந்தம்!

இந்த ஒப்பந்தப்படி அனில் திருபாய் அம்பானி குழுமமும் ஸ்பீல்பெர்கின் ட்ரீம் ஒர்க்ஸ் ஸ்டுடியோவும் இணைந்து ஆண்டுக்கு ஆறு திரைப்படங்களை உருவாக்க உள்ளன. இதற்கான முதலீட்டின் ஒரு பகுதியாக 825 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது அனில் திருபாய் அம்பானி குழுமம்.
இந்த ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. சர்வதேச சினிமாவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது.
இதுகுறித்த முறையான அறிவிப்பை நேற்று நியூயார்க்கில் ஸ்பீல்பெர்க்கும், அனில் அம்பானியும் கூட்டாக வெளியிட்டனர். பின்னர் நிருபர்களிடம் இருவரும் பேசினர்.
அனில் அம்பானி கூறியதாவது:
இந்தப் படங்களை ட்ரீம்ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்து வால்ட் டிஸ்னி மூலம் வெளியிடும். இந்தியாவில் மட்டும் இந்தப் படங்களுக்கான டிடிஎச், டிவிடி உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் ரிலையன்ஸ் பிக் எண்டர்டெயின்மெண்டுக்கு சொந்தமாக இருக்கும்.
இந்தப் படங்களுக்கான முதலீட்டில், 350 மில்லியன் டாலர் என்னுடைய தனிப்பட்ட பங்கு. 150 மில்லியன் டாலர் டிஸ்னியின் பங்கு. 350 மில்லியன் டாலர்களை பொதுமக்களிடம் பங்குகள் மூலம் திரட்டுகிறோம், என்றார்.
இந்த நிறுவனத்தின் முதல் படைப்பு வரும் 2010-ம் ஆண்டு வெளியாகும்.
இதுகுறித்து ஸ்பீல்பெர்க் கூறுகையில், "ஒரு புதிய எதிர்காலத்துக்கான கதவுகளைத் திறந்துள்ளது ரிலையன்ஸ். அவர்களின் ஒப்பந்தம் மற்றும் ஒத்துழைப்பு எங்கள் கனவுகளை மேலும் விரிவடையச் செய்துள்ளது. விரைவில் இந்தியாவுக்கு வந்து அங்குள்ள படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களைச் சந்திக்கவிருக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











