ரஜினியை நான் தடுக்கவில்லை-சத்தியநாராயணா

By Staff

Sathyanarayana
ரஜினியை அரசியலுக்கு வரவேண்டாம் என நான் தடுக்கவில்லை. அவர் அரசியலுக்கு வந்தால் சந்தோஷப்படும் முதல் நபர் நான்தான், என்று அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா கூறியுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக மீண்டும் பேச்சுக்கள் கிளம்பியுள்ள நிலையில், அவரது ரசிகர் மன்றங்களின் தலைமைப் பொறுப்பினை வகிக்கும் சத்தியநாராயணா ஒரு பத்திரிகைக்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி இது.

ரஜினி அரசியலுக்கு வருவாரா, ரசிகர்களை அவர் அக்டோபர் மாதம் சந்திப்பதன் நோக்கம் குறித்து அவர் விரிவாக இதில் கூறியுள்ளார்.

ரஜினியை மட்டுமல்ல… உங்களை சந்திப்பதுகூட ரசிகர்களுக்கு குதிரைக் கொம்பாகி விட்டதே…?

அப்படியெல்லாம் இல்லை. ரசிகர்கள் என்னைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களைத் தவிர்க்கவேண்டிய அவசியமும் எனக்குக் கிடையாதே!

ரசிகர்களின் எண்ணங்களைத் தலைவருக்குச் சொல்லவும், தலைவரின் எண்ணங்களை ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தவுமான பாலம்தான் நான். அரசியல் குறித்த சலசலப்புகள் கிளம்புகிற போது மட்டும் ரசிகர்களை சந்திக்கத் தயங்குவது உண்டு.

காரணம், ரசிகர்களின் அந்த சமயத்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் போய், அவர்களை ஏமாற்றத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதுதான். மற்றபடி, மன்றத் தலைவராக என் கடமைகளை நிறைவாகவே செய்து வருகிறேன்.

ரசிகர்களைக் கையாளுகிற விதத்தில் உங்களுக்கும் ரஜினிக்கும் இடையே மனக்கசப்பு உருவாகிவிட்டதாகச் சொல்கிறார்களே...

பல காலமாக்க் கிளப்பிவிடப்பட்டிருக்கும் பேச்சு இது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள், எதற்காக இப்படி அவதூறு பரப்புகிறார்கள் என்பது பற்றிக் கூட நான் விசாரிப்பது கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். என் தலைவர் மனது எனக்குத் தெரியும். என் நடவடிக்கை அவருக்குப் புரியும். இதில் மனக்கசப்பு வர எங்கே வாய்ப்பு இருக்கிறது?

தலைவரின் அபிமானத்துக்குரிய இடத்தில் நான் இருந்தாலும் என்க்கான வரையறை எனக்குத் தெரியும். அதை மீற மாட்டேன். தலைவரின் பின்னால் அணிவகுத்திருக்கும் ரசிகர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என்பதில் அக்கறை காட்டும் நான், தலைவரின் மனம் கோணும்படி நடப்பேனா? இதை உங்கள் ஆராய்ச்சிக்கே விட்டுவிடுகிறேன்.

உங்களை மன்றத்தை விட்டே ஒதுக்கி வைக்கப் போவதாக உங்களுக்குக் கீழிருக்கும் நிர்வாகிகள் சிலரே கூறுகிறார்களே... மேலும் ரஜினி குடும்பத்தினே மன்றத்தைக் கவனிக்கப் போகிறார்களாமே...

இதுவும் பல நாள் புரளிதான். இத்தகைய செய்திகளுக்குக் காரணமாக என் மீது என்ன குற்றச்சாட்டு உள்ளது? என் பெயர் போட வேண்டும், என்று நிர்பந்தப்படுத்தினேனா... அல்லது ரஜினி பெயரா வைத்து தனியாக வியாபாரம் செய்து சம்பாதித்தேனா...என்ன குற்றச்சாட்டு என்மீது...

தலைவரின் குடும்பத்தினர் மன்றங்களை கவனிக்கத் தொடங்கினால் அது எங்களுக்கும் மகிழ்ச்சியான விஷயம்தான். எனக்குக் கொடுத்திருக்கும் பணியை நான் செவ்வனே செய்து கொண்டிருக்கிறேன். அது போதும்...எனக்கு!

ரசிகர்களின் கருத்துக்களை ரஜினியிடம் சரியாக கொண்டு போவதில்லை என்றும் அவரை ரசிகர்கள் நெருங்கி தனி டிராக்கில் செல்வாக்கு சேர்த்து விடக் கூடாது என்றும் நீங்கள் கவனமாக இருக்கிறீர்களாமே…?

ஒவ்வொரு மாவட்ட ரசிகர்களின் எண்ணங்களும் தலைவருக்கு தகுந்த நேரத்தில் போய்க்கொண்டுதான் இருக்கிறது. அவரும் அவற்றை பரிசீலிக்கிறார். ஆனால், தலைவர் எதற்காகவாவது வாய்ஸ் கொடுக்க வேண்டும் என அவ்வப்போது சில ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆசைப்படுகிறார்கள். அது நடக்காதபோது அங்கே என் தலை உருட்டப்படுகிறது.

இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் என் மீது அடுக்கினால் அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். அது ரசிகனின் புரிந்துகொள்ளும் சூழ்நிலையைப் பொறுத்தது.

ஆனால், அவர்களின் உணர்வுகளை நான் எப்போதும் மதிக்கிறேன். அதற்காக அந்த ஆக்ரோஷமான உணர்வுகளை நான் தலைவரிடம் அப்படியே ஒப்பிக்க முடியுமா?

அரசியல் ரீதியான விவகாரங்கள் தவிர்த்து இதர விஷயங்களில் ரசிகர் மன்ற நிர்வாகிகள், தலைமையோடு நல்ல இணக்கத்தில்தான் இருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி ரசிகர்களை எப்போது சந்திக்கவேண்டும் என முடிவெடுப்பது தலைவரின் கையில்தான் இருக்கிறது. அப்படியிருக்க, ரசிகர்களுக்கு நான் நந்தியாக இருப்பதாகச் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

அரசியலில் தலைவர் உடனே இறங்கவேண்டும் என ஆசைப்படும் சில மன்ற நிர்வாகிகள், அதே ஸ்பீடில் தலைவரிடம் இதுபற்றி நான் பேசி ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அரசியல் விஷயத்தில் தன்னிச்சையாக நான் எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது. இதுதான் நிதர்சனம்.

ஆனால், இதை என்னுடைய இயலாமையாகவோ, திட்டமிட்ட மெத்தனமாகவோ சிலர் நினைக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? தலைவர் அரசியலுக்கு வந்தால் சந்தோஷப்படும் முதல் ஆள் நான்தான்.

அரசியலைப் பொறுத்தமட்டில் தலைவர் யாரையும் பாதிக்காத முடிவைத்தான் எடுப்பார். கடைக்கோடி ரசிகனின் நிலைப்பாடு வரை அவர் யோசிப்பார். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவர் செயல்பட மாட்டார். இதையெல்லாம் புரிந்துகொள்ளாத ஒருசில ரசிகர்கள் ஆதங்கப்பட்டால் நான் என்ன செய்வது?

அக்டோபர் புரட்சியாக, ரொம்ப நாளைக்கப்புறம் ரசிகர்களை ரஜினி சந்திக்கப் போவதாகச் சொல்வது உண்மைதானே…?

உண்மைதான். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகிகளையும் ஒருசேர தலைவர் இதுநாள் வரை சந்தித்ததில்லை. ஆனால், அக்டோபர் முதல் வாரத்தில் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி இருக்கிறார்.

முதல் நாள் சென்னை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளையும், அடுத்த நாள் இதர மாவட்ட நிர்வாகிகளையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தத் தகவலை அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் சொல்லி இருக்கிறோம். எந்திரன் ஷூட்டிங்கால் ஒருசில நாட்கள் தள்ளிப் போனாலும் இந்த முறை தலைவர் கண்டிப்பாக ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பார். அதில் மாற்றமே இல்லை.

சிரஞ்சீவியைப் போல் கட்சி ஆரம்பிப்பதற்கான முன்னோட்டமாக அந்த சந்திப்பு இருக்குமா?

ஓய்வாக இருக்கிற நாட்களில் தலைவர் முடிந்த மட்டும் மன்றத்தினரைச் சந்தித்துக் கொண்டுதான் இருந்தார். ஒரு கட்டத்தில் வந்தவர்களே திரும்பத் திரும்ப வந்ததைக் கண்டு, தன்னை நேரில் பார்க்கவே முடியாது என ஏங்குகிற ஆட்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள் எனச் சொல்வார். ஆனால், அதற்குப் பின்னர் தலைவருக்கு ஓய்வு கிடைப்பது சாத்தியமில்லாத ஒன்றாகி விட்டது.

இப்போது அவர் அனைவரையும் சந்திப்பதாகச் சொல்லி இருப்பதில் எல்லோருக்குமே மிகுந்த சந்தோஷம். ஆனால் அரசியல் குறித்தோ, வேறேதும் விவகாரங்கள் குறித்தோ அவர் என்ன பேசப் போகிறார் என்று இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது. தலைவரின் முடிவு என்னவாக இருந்தாலும் அதன்படி நடக்க மட்டும்தான் எனக்குத் தெரியும்.

மண்டபத்தை முற்றுகையிட்ட ரசிகர்களுக்காக ரஜினி தனியே படம் செய்து தரப் போகிறார் என்று சொல்லப்படுகிறதே…?

ரசிகர்கள் மண்டபத்தை முற்றுகையிட்டார்கள் என்பதே தவறு. நான்கு மாவட்ட நிர்வாகிகள் மண்டபத்துக்கு வந்தார்கள். தலைவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என அவர்களின் விருப்பத்தை என்னிடம் சொன்னார்கள். சரி தலைவரிடம் சொல்கிறேன் என்றேன். போன் மூலம் சொல்லவும் செய்தேன். இதுதான் நடந்தது.

ஆனால், ரசிகர்கள் மண்டபத்தை முற்றுகை இட்டதாகவும், அதற்காக ரசிகர்களுக்கு படம் பண்ணிக் கொடுக்க முயற்சி நடப்பதாகவும் ஏதேதோ கிளம்பி விட்டது. மொத்தத்தில் தலைவர் ரசிகர்களை சந்திக்கிற நாளில் உங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்...என்று கூறியுள்ளார் சத்யநாராயணா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X