தீபாவளி 'சினிமா பஞ்சம்'!
தமிழ்த் திரையுலக வரலாற்றில் இப்படி ஒரு சினிமாப் பஞ்சம் வந்து நீண்ட காலமாகி விட்டது என்று கூறும் வகையில், இந்த தீபாவளிக்கு மொத்தமே 3 படங்கள்தான் வெளியாகின்றன. அந்த மூன்றுமே 2ம் நிலை நடிகர்களின் படங்கள்தான். சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள் எதுவும் இந்தத் தீபாவளிக்கு திரைக்கு வரவில்லை.
ஜெகன்மோகினி, ஆதவன், பேராண்மை ஆகிய மூன்று படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வருகின்றன. அதில் பேராண்மை இன்று ரிலீஸாகிறது. மற்ற இரு படங்களும் நாளைக்கு திரைக்கு வரவுள்ளனவாம்.
பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது வெளியிடப்பட வேண்டும் என்று சமீபத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தீர்மானித்தது.
இந்த நிலையில் வரும் முதல் தீபாவளியன்று வெறும் 3 படங்கள் மட்டுமே களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளன.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் ஆகிய நான்கு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லை. ரஜினிகாந்த் எந்திரன் படத்தில் ரொம்ப நாட்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் சமீபத்தில்தான் மெகா ஹிட் படத்தைக் கொடுத்து இப்போதுதான் அடுத்த படம் குறித்த ஆய்வில் உள்ளார்.
விஜய் நடித்த வேட்டைக்காரன் ரெடியாகி விட்டது. அஜீத்தும் அசல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் தீபாவளிக்கு மிகக் குறைந்த அளவிலான படங்கள் வருவதாக திரையுலகில் கூறிக் கொள்கிறார்கள்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள படம் ஆதவன். இயற்கை என்ற நல்ல படத்தைக் கொடுத்த ஜனநாதன் இயக்கியுள்ள படம் பேராண்மை. அதேபோல என்.கே.விஸ்வநாதன் இயக்கியுள்ள படம் ஜெகன்மோகினி. இந்தப் படத்திற்குத்தான் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பது போல ஜெகன்மோகினி படத்துக்கு அட்டகாசமாக இசையமைத்துள்ளார் இளையராஜா என்கிறார்கள். மேலும் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அதை விட முக்கியமாக ஒரிஜினல் ஜெகன்மோகினி பயங்கர ஹிட் படம் என்பதால் இந்த ரீமேக்கைப் பார்க்க ரசிகர்களிடையே பெரும் ஆவல் எழுந்துள்ளது.
பேராண்மை கிட்டத்தட்ட 250 திரைகளில் ரிலீஸாகிறதாம். ஆதவன் படத்தை சென்னையில் மட்டும் 15 திரைகளில் வெளியிடுகிறார்களாம்.
அதேபோல தமிழ்ப் படங்களுக்கு இணையான விறுவிறுப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள ஒரு இந்திப் படமும் தீபாவளிக்கு வருகிறது. அது 'ப்ளூ'. இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வேட்டைக்குப் பின்னர் இசையமைத்துள்ள முதல் படம் இது என்பதால் இந்த எதிர்பார்ப்பு.
தமிழகம் முழுவதும் 35 திரைகளில் 'ப்ளூ' திரையிடப்படவுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











