நிதிப் பிரச்சினை-தடுமாறும் பாலிவுட்

பல பெரும் பட்ஜெட் படங்களை நிறுத்தி வைக்கவும், பட்ஜெட்டை சுருக்கவும் பாலிவுட் தயாரிப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடியால், விநியோகஸ்தர்கள்தான் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் முகேஷ் பட் கூறுகிறார்.
படம் எடுத்து முடித்தாலும் கூட, அதை வாங்குவோரைக் கண்டுபிடிப்பது சிரமமாகி விட்டது. மேலும் போட்ட பணம் திரும்ப வருமா என்பதிலும் உத்தரவாதம் இல்லை. பொருளாதார வீழ்ச்சியால் தற்போது தயாரிப்பில் இருக்கும் 9 சதவீத படங்கள் அப்படியே நின்று போயுள்ளன.
தயாரிப்பு செலவு, நிர்வாக செலவு, நடிகர்களின் சம்பளம் ஆகியவை தாறுமாறாக உள்ளன. இவற்றுக்கெல்லாம் செலவழித்தால் இவையெல்லாம் திரும்ப வரும் என்பதில் சுத்தமாக உத்தரவாதம் இல்லை. கடைசியில் பெரும் நஷ்டத்தை சம்பாதிப்பது விநியோகஸ்தர்கள்தான் என்றார்.
வெந்த புண்ணில் ஆசிட்டை ஊற்றுவது போல முன்பெல்லாம் தாராளமாக கடன் கொடுத்து வந்த வங்கிகள் இப்போது சினிமா படம் எடுப்போருக்கு கடன் கொடுப்பதில் பெரும் தயக்கம் காட்டுகின்றனவாம்.
இந்த அவல நிலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிப்புத் துறைக்குள் கால் எடுத்து வைத்ததுதான் என்கிறார் முகேஷ் பட். அவர்கள்தான் இந்த அளவுக்கு இன்டஸ்ட்ரி பெரும் சிக்கலை சந்திக்க முக்கிய காரணம்.
இவர்கள் இஷ்டத்திற்கு பணத்தை தண்ணீராக செலவழித்து படம் எடுக்க ஆரம்பித்ததால், உண்மையான தயாரிப்பாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அவர்கள் படத் தயாரிப்பிலிருந்தே ஓரம் கட்டப்பட்டு விட்டனர்.
நடிகர், நடிகையருக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பளத்தை பெருமளவில் உயர்த்தியதால், தயாரிப்பாளர்களுக்குத்தான் இப்போது அவதி.
நடிகர், நடிகையரின் சமப்ளத்தைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த சம்பள உயர்வு கண்டிப்பாக திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றார்.
நிதிப் பிரச்சினை காரணமாக மிகப் பெரிய அளவில் புரோமோக்களை திட்டமிட்டிருந்த பல பெரிய பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் சுருக்கமாக அவற்றை திட்டமிட்டுள்ளனர்.
கஜினி, ரப் நே பனா தி ஜோடி, சாந்தினி செளக் டு சைனா ஆகியவை, செலவை சுருக்கிய படங்களில் சில.


Click it and Unblock the Notifications











