கோலிவுட்டில் 'ரீமேக் சுனாமி'!

முன்பெல்லாம் இந்தி ஹிட், தெலுங்கு ஹிட், மலையாள ஹிட் படங்களை தமிழில் ரீமேக் செய்வார்கள். பலர் ஆங்கிலப் படங்களை பார்த்து காப்பி அடித்து படம் எடுத்ததும் உண்டு (இப்போதும் அது தொடர்கிறது).
இந்த நிலையில் சமீப காலமாக தமிழ்ப் படங்களையே ரீமேக் செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்த டிரென்ட் ஆரம்பத்தில் லேசு பாசாக இருந்தது.
ஆனால் பில்லா படத்தின் ரீமேக்கும், நான் அவனில்லை ரீமேக்கும் ஹிட் ஆனதால் தற்போது ரீமேக் மோகம், சுனாமி அலைகளைப் போல கோலிவுட்டை கடுமையாக தாக்க ஆரம்பித்துள்ளது.
சுப்ரமணியபுரம் ஹிட்டைத் தொடர்ந்து அதே டைப்பிலான படங்கள் மீது தற்போது மோகம் திரும்பியுள்ளதாம். சிலர், பாலைவனச்சோலை படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
தற்போது முரட்டுக்காளை, நூற்றுக்கு நூறு, ஆகிய படங்கள் ரீமேக் ஆகி வருகின்றன.
இதைத் தொடர்ந்து ஜானி, மூன்று முகம் ஆகிய ரஜினி படங்கள் ரீமேக் ஆக காத்துள்ளன. சிவாஜி கணேசனின் புதிய பறவையும் ரீமேக் ஆகப் போகிறது. அதேபோல பலே பாண்டியாவையும் ரீமேக் செய்யவுள்ளனர்.
இயக்குநர்-நடிகர் மனோபாலா, காதலிக்க நேரமில்லை படத்தை ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
அதேபோல கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படமான கல்யாண ராமனையும் ரீமேக் செய்யப் போவதாக பேச்சு அடிபடுகிறது. சிகப்பு ரோஜாக்களும் இந்த ரீமேக் பட்டியலில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
இப்படி ஏற்கனவே வந்த படங்களை ரீமேக் செய்வது தமிழ் சினிமாவின் சுயத்திற்கு விழும் பெரும் அடியாகும் என சில மூத்த இயக்குநர்கள் கருத்து தெரிவித்துள்ளனராம்.
இன்றைய இளம் தலைமுறை இயக்குநர்கள் சுய சிந்தனையுடன், நல்ல படங்களைக் கொடுப்பதை விட்டு விட்டு இப்படி ரீமேக் மோகத்திற்கு பலியாவது தமிழ் சினிமாவுக்கும், அவர்களுக்கும் நல்லதல்ல என்கிறார்கள் இவர்கள்.


Click it and Unblock the Notifications











