நகரி தொகுதியிலிருந்து சந்திரகிரிக்கு மாறும் ரோஜா

நடிகை ரோஜா தற்போது அரசியல்வாதி. தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவியாக உள்ளார். சித்தர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதே மாவட்டத்தில், தமிழர்கள் அதிகம் உள்ள தொகுதியான நகரியில் கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார் ரோஜா.
அப்போது உள்ளூர் தெலுங்கு தேசம் கட்சிப் பிரமுகர்கள் ரோஜாவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. சீட் கிடைக்காத அதிருப்தியில் இருந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வியுற்றார் ரோஜா.
இருந்தாலும் நகரியை தனது தொகுதியாகவே கருதி தொடர்ந்து அங்கு பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார் ரோஜா. இதனால் தொகுதியில் அவருக்கு நல்ல பெயர் உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் ரோஜாவுக்கு இதே தொகுதியே கிடைக்கும் என்ற பேச்சு எழுந்தது. இதனால் அதிருப்தியுற்ற உள்ளூர் தலைவர்கள், இந்தமுறையும் ரோஜாவுக்கு சீட் கொடுத்தால் நிச்சயம் அவர் தோற்பார் என கட்சி மேலிடத்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து, ரோஜாவுக்கு சீட் தரக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, புத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ முத்துக்கிருஷ்ணம்ம நாயுடு சமீபத்தில் தெலுங்குதேசத்தில் இணைந்தார். அவரது புத்தூர் தொகுதி, தொகுதி சீரமைப்பின் கீழ் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தொகுதி மாற வேண்டிய நிலை உள்ளது.
ரோஜாவுக்கு நகரியில் எதிர்ப்பு இருப்பதால் பேசாமல் முத்துக்கிருஷ்ணம்ம நாயுடுவுக்கு நகரியைக் கொடுக்க சந்திரபாபு நாயுடு தீர்மானித்துள்ளாராம்.
மேலும் ரோஜாவை சந்திரகிரி தொகுதிக்கு மாற்றவும் அவர் உத்தேசித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











