சிறந்த இயக்குநர் அமீர்கான்!

11வது கொல்லப்புடி சீனிவாச நினைவு சிறந்த இயக்குநருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் சென்னையில் நடந்த விழாவில் பெயரை அறிவித்தார்.
அதன்படி தாரே ஜமீன் பர் படத்தை இயக்கிய அமீர்கான் சிறந்த இயக்குநர் விருதைப் பெறுகிறார்.
சிங்கீதம் சீனிவாச ராவ், திரைப்பட சம்மேளனத்தின் முன்னாள் இயக்குநர் கல்யாண ராமன், கொல்லப்புடி மாருதி ராவ் உள்ளிட்ட 19 பேர் கொண்ட குழு ஒரு மனதாக அமீர்கானை இந்த விருதுக்குத் தேர்வு செய்துள்ளது.
அமீர்கான் பெயரை அறிவித்து கமல்ஹாசன் கூறுகையில், அமீர் இந்த விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரு பாப்புலர் ஸ்டாராக, ஏன் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக, வேறு ஏதாவது ஒரு கதையை எடுத்துக் கொண்டு படமாக்கி வெற்றி பெற்றிருக்க அமீரால் முடிந்திருக்கும்.
ஆனால், திரைத் துறை மீதான தனது மோகத்திற்கு மதிப்பளித்து, தனக்கு முக்கியத்துவம் இல்லாத ஒரு கதையை எடுத்துக் கொண்டு வென்றிருக்கிறார். இந்தப் படத்தை இயக்குவதற்கு முன்பு நான்கு ஆண்டுகள் அவர் உதவி இயக்குநராகப் பணியாற்றி அனுபவத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது பலருக்கும் தெரியாது என்றார்.
26 வயதில் அகால மரணமடைந்தவர் கொல்லப்புடி சீனிவாச ராவ். தனது முதல் படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார். அவரது நினைவாக 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விருது ஏற்படுத்தப்பட்டது.
ரூ. 1.5 லட்சம் ரொக்கப் பரிசு, நினைவுப் பரிசு ஆகியவை இதில் அடக்கம். ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் அமீர்கானுக்கு விருது வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications











