எனது அடுத்த படம் தென்கிழக்குச் சீமையிலே!-பாரதிராஜா

தெற்கத்திப் பொண்ணு தொடரின் 500வது நாள் விழாவில், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இதனை அறிவித்தார் பாரதிராஜா. விழாவில் அவர் பேசியதாவது:
என் 35 ஆண்டுகால உழைப்பில் கிடைக்காத பெயரும், புகழும் 2 ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருக்கும் இந்த தொடரில் கிடைத்திருக்கிறது.
நான் மூன்று முதல்வர்களிடம் பழகியிருக்கிறேன். தமிழர்களின் முதல்வர் கருணாநிதி மட்டுமே. நான் அவரைப் பார்க்கும்போது அவரது நாற்காலியை பார்க்க மாட்டேன். அவர் முகத்தை, அனுபவத்தை, ஆற்றலை மட்டுமே பார்ப்பேன்.
முதல்வர் கருணாநிதியிடம் முட்டி மோதிய காலகட்டத்தில் கூட, 'நீ என்ன வேணும்னாலும் பண்ணு. என்னில் இருக்கும் உன்னை எடுக்க முடியாது' என்கிற மாதிரியே நடந்துகொண்டார். இப்படியொரு மனம் அவருக்கு மட்டும்தான் உண்டு. அவர் என் பிள்ளைகள் திருமணத்தையும் நடத்திக் கொடுத்தவர். எனக்கு அப்பன் இல்லை. அப்பனாக இருந்து என் பிள்ளைகள் திருமணத்தை நடத்தி தந்து என்னை பெருமைப்படுத்தியவர்.
என் கலை வாழ்வில் ஒரு பதிவு வேண்டும் என்பதற்காகவே இந்த விழாவில் நீங்கள் வாழ்த்த வேண்டும் என்று அழைத்தேன். உங்கள் வாழ்த்து கிடைத்ததை என் பிள்ளைகளின் பிள்ளைகளும் அவர்கள் தலைமுறை வரைக்கும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
நான் அடுத்து தென் கிழக்கு சீமையிலே, குற்றப்பரம்பரை என 2 படங்களை இயக்கவிருக்கிறேன். இவை இரண்டும் தமிழர் வாழ்வின் மறக்க முடியாத பதிவுகளாக இருக்கும். தென்கிழக்குச் சீமையிலே படத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளேன். இந்த 2 படங்களும் வெளியாகி இரண்டுக்கும் முதல்வர் கையால் விருது வாங்கவேண்டும். இதுவே என் இப்போதைய ஆசை..." என்றார்.
நடிகை குஷ்பு, ரோஜா, தயாரி்ப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications











