'களவாணி' பட இயக்குநர் சற்குணம் போல பேசி நடிகைகளிடம் மோசடி செய்ய முயன்ற ஆசாமி!
களவாணி பட இயக்குநர் சற்குணம் குரலில் பேசி புதிய நடிகைகளிடம் பணம் பறிக்க முயன்ற ஆசாமியை போலீஸ் தேடி வருகிறது.
'களவாணி' படம் மூலம் பிரபலமானவர் இயக்குநர் சற்குணம். இப்போது வாகை சூடவா படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், இயக்குநர் சற்குணம் ஒரத்தநாடு அருகில் உள்ள பாப்பநாடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரில், "நான் இப்போது, 'வாகை சூடவா' என்ற படத்தை எடுத்து முடித்துள்ளேன். அடுத்த படம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், நான் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டதாகவும், அந்த படத்தில் 3 கதாநாயகிகள் நடிப்பதாகவும் கூறி, யாரோ ஒரு ஆசாமி மோசடி முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ரூ.50 ஆயிரத்தை ஏ.டி.எம்.மில் போட்டால், சற்குணம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று ஒரு புதுமுக நடிகையிடம் பேசியிருக்கிறார். இன்னொரு புதுமுக நடிகையிடம், ரூ.34 ஆயிரம் கேட்டு இருக்கிறார்.
மறுநாள், அதே நடிகையிடம் நான் பேசுவது போல் போனில் பேசியிருக்கிறார். படத்தின் கதாநாயகன்தான் தயாரிப்பாளர் என்றும், அவருடன் போனில் பேசும்படியும் கூறி, ஒரு நம்பரை கொடுத்து இருக்கிறார்.
என் பெயரை சொல்லி மோசடி செய்ய முயன்ற அந்த ஆசாமியை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறியுள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, இயக்குநர் சற்குணம் பெயரை சொல்லி மோசடி செய்ய முயன்ற ஆசாமியை தேடி வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் இயக்குநர் சசிகுமார் பெயரில் புதிய நடிகைகளிடம் போனில் பேசி பணம் பறிக்க ஒரு ஆசாமி முயன்றதாக சசிகுமார் புகார் தந்தது நினைவிருக்கலாம். இதே ஆசாமிதான் சற்குணம் பெயரிலும் மோசடிக்கு முயல்கிறாரா என போலீசார் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications