twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் பஞ்சாயத்தில் பாலா!

    By Staff
    |

    Bala
    பாலாவின் படம் வருகிறதோ இல்லையோ, அவரைப் பற்றி பல சுவாரஸ்யமான, ரகளையான செய்திகள் மட்டும் வந்துகொண்டே இருக்கின்றன.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் தொடங்கிய நான் கடவுள் திரைப்படம் இப்போது மீண்டும் பஞ்சாயத்துக்கு வந்திருக்கிறது.

    இந்தப் படத்தைத் தொடங்கியபோது படத்தின் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன். முதல்பிரதி அடிப்படையில் படத்துக்கு பட்ஜெட் ரூ.4 கோடி. ஆனால் 10 சதவிகித படம் கூட முடிவடையாத நிலையில் படத்துக்கு ரூ.7 கோடிவரை தேவைப்படும் என்று பாலா கூற அதிர்ந்துபோன தேனப்பன் அதோடு படத்தை பிரமிட் சாய்மிராவுக்கு தள்ளிவிட்டார்.

    அவர்களும் பாலா கேட்ட 7 கோடியைக் கொடுத்து படத்தை தொடரச் சொன்னார்கள். கிட்டத்தட்ட 230 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பாலா, ஒருவழியாக படத்தை முடித்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கினார். இப்போது மேலும் 8 கோடி கொடுத்தால்தான் படத்தை வெளியிட முடியும் என்று கூறிவிட்டார்.

    படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, பட்ஜெட்டுக்குமேல் 8 கோடி ரூபாய் வரை தான் செலவு செய்திருப்பதாகவும், அந்தத் தொகையைக் கொடுத்தால்தான் படத்தை வெளியிட முடியும் என்றும் பாலா தீர்மானமாகக் கூறிவிட, இப்போது விஷயம் தயாரிப்பாளர் கவுன்சிலின் பஞ்சாயத்துக்குப் போய்விட்டது!

    புகாரை முதலில் கொண்டுபோனவரே பாலாதான். தான் செலவழித்த மொத்தத் தொகையையும் கொடுத்தால்தான் படத்தை சாய்மிராவுக்குக் கொடுக்க முடியும் என்று உறுதியாக நிற்கிறார் பாலா. சாய்மிராவோ, இந்தப் படத்தை பேசியபடி ரூ.7 கோடிக்கே தங்களுக்குத் தரவேண்டும் என்கிறது.

    ஆனால் தயாரிப்பாளர் சங்கம், முதலில் படம் வரட்டும், மற்றதைப் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று வழக்கமான யோசனையைக் கூற, அதற்கு உடன்படவில்லை பாலா. காரணம் பருத்திவீரனில் அவரது நண்பர் அமீருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்.

    பருத்திவீரன் மிகப்பெரிய வெற்றிப்படம். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் கோடி கோடியாகச் சம்பாதித்தாலும், படத்தின் நாயகன் ஒரே இரவில் பல கோடி சம்பளம் வாங்கும் சூப்பர் ஹீரோ ஆகிவிட்டாலும், அந்தப் படத்தை உருவாக்கிய அமீருக்கு இன்னும்கூட ரூ.80 லட்சம், தயாரிப்பாளரிடமிருந்து வர வேண்டியிருக்கிறது.

    இதற்கான பஞ்சாயத்து இன்னும் முடிந்தபாடில்லை.

    இதை மனதில் கொண்டு, செலவழித்த மொத்தப் பணத்தையும் முதலிலேயே செட்டில் செய்துவிட்டு பெட்டியை எடுங்கள் என கூறுகிறார் பாலா.

    இதுவரை வந்த பாலாவின் படங்களைக் காட்டிலும் மிகச் சிறப்பாக இந்தப் படம் வந்திருப்பதாக இப்போதே கோடம்பாக்கத்தில் பேச்சு நிலவுகிறது. படத்துக்கு இளையராஜா கொடுத்திருக்கும் பாடல்கள் வேறு பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. எனவே படத்தை விட்டுவிடவும் மனமில்லாமல், வாங்கவும் துணிவில்லாமல் யோசித்துக்கொண்டிருக்கிறது சாய்மிரா.

    என்ன செய்யப் போகிறார் தலைவர் ராமநாராயணன் என்று தமிழ்த் திரையுலகே ஆவலுடன் காத்திருக்கும் பஞ்சாயத்து அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X