மீண்டும் ஆஸ்கர் போட்டியில் ரஹ்மான்?
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்காக இரட்டை ஆஸ்கர் வென்று சாதனைப் படைத்த நம்ம ஊர் இசைமேதை ஏ ஆர் ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கர் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரபல சினிமா பின்னணி இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தனது அபார இசைத் திறமையால் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்து வரும் சுத்தத் தமிழர். கடந்த 2009-ம் ஆண்டு "ஸ்லம்டாக் மில்லினர்'' என்ற படத்துக்கு இசை அமைத்ததற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார்.
இந்த நிலையில் இந்த ஆண்டு அவர் மீண்டும் ஆஸ்கார் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
44 வயதான ரஹ்மான் "127 மணி நேரம்'' என்ற ஆங்கில சினிமாவில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு சிறப்பான முறையில் ஒரிஜினல் இசையை கம்போஸ் செய்துள்ளமைக்காகப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்தப் பாடல் ஏற்கெனவே உலகமெங்கும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இசை விற்பன்னர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
ரஹ்மானுக்கு இந்த ஆண்டும் ஆஸ்கார் பரிசு கிடைக்குமா? மீண்டும் ரஹ்மான் ஆஸ்கர் மேடையில் தமிழை ஒலிக்க வைக்க சந்தர்ப்பம் கிடைக்குமா? என்பது ஜனவரி 6-ந்தேதி தெரிந்துவிடும்..
இதே படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் ஏற்கெனவே "கோல்டன் குளோப்'' விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்லம்டாக் மில்லியனேர் படம் இயக்கிய அதே டேனி பாய்லின் புதிய படம்தான் இந்த 127 ஹவர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 2009-ம் ஆண்டிலும் இதேபோல, கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுக்கு அடுத்தடுத்து பரிந்துரைக்கப்பட்ட ரஹ்மான், அந்த இரண்டு விருது விழாவிலும் ஹீரோவாக ஜொலித்தார்.
இந்த ஆண்டும் அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே கோடிக்கணக்கான அவரது இசை ரசிகர்கள் மனக்கிடக்கையாக உள்ளது!


Click it and Unblock the Notifications











