சினிமாவில் நடிக்க விருப்பமே இல்லை-சாய்னா நெஹ்வால்

பேட்மின்டனில், உலகின் நம்பர் 2 வீராங்கனையாக உருவெடுத்துள்ளர் சாய்னா. விரைவில் முதலிடத்தைப் பிடிப்பேன் என்றும் நம்பிக்கையோடு கூறியுள்ளார்.
நம்பர் 2 வீராங்கனையாக உருவெடுத்துள்ள சாய்னாவுக்கு இந்தியாவில் புகழ் மேலும் அதிகரித்துள்ளது. கிரிக்கெட் பைத்தியம் பிடித்த இந்தியாவில், அதைத் தாண்டி ஒரு விளையாட்டு பிரபலமாவது என்பது மிகப் பெரிய, அரிய விஷயமாகியுள்ளது.
முன்பு சானியா மிர்ஸா பிரபலமானார். ஆனால் அவர் ஆடிய டென்னிஸை விட அவரது கவர்ச்சியால்தான் சானியாவுக்கு பிரபலத்தை தேடித் தந்தது எனலாம். ஆனால் சானியாவை தூக்கி சாப்பிட்டு விட்டார் சாய்னா தனது விளையாட்டுத் திறமையால்.
பேட்மின்டன் விளையாட்டில் சர்வதேச அரங்கில் அட்டகாசமாக உயர்ந்து வரும் சாய்னா தற்போது 2வது ரேங்குக்கு உயர்ந்துள்ளார். இது மிகப் பெரிய சாதனையாகும்.
இந்த நிலையில் சாய்னாவைத் தேடி சினி்மா வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. ஆனால் சினிமாவுக்குப் பெரிய கும்பிடு போட்டு விட்டார் சாய்னா.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. அதில் மட்டுமே இருக்க விரும்புகிறேன். சினிமா என்பது வேறு ஒரு துறை. அந்தத் தொழிலே வேறு. அது எனக்குப் பிடிக்கவில்லை. நிச்சயம் நான் சினிமாவுக்குப் போக மாட்டேன் என்கிறார் சாய்னா.
அதேசமயம், கோக் விளம்பரத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் சாய்னா. காரணம் அவர் ஒரு கோக் பைத்தியம். விட்டால் நாள் முழுக்கக்கூட குடித்துக் கொண்டே இருப்பாராம். இதனால் கோக் விளம்பரத்தில் மட்டும் நடிக்கலாம் என்கிறார் அடக்கமாக.
விளம்பரம் தேடும் விளையாட்டு பிரபலங்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர். உண்மையிலேயே சாய்னா சாம்பியன்தான்.


Click it and Unblock the Notifications











