பிரசாந்த்-கிரகலட்சுமி விவாகரத்து வழக்குக்கு சுப்ரீம் கோர்ட் தடை

கிரகலட்சுமியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் பிரசாந்த் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ஜூன் மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று முன்தினம் பிரசாந்த் குடும்பநல கோர்ட்டில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கிரகலட்சுமியிடம் வளர்ந்து வரும் தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் கிரகலட்சுமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2 மாத கர்ப்பிணியாக இருந்தபோது என்னை பிரசாந்த் கைவிட்டு விட்டார். நான் அனாதையாக விடப்பட்டேன்.
பிரசாந்தின் ஆதரவு மட்டுமல்லாமல் எனது மாமனார், மாமியார் ஆதரவும் எனக்குக் கிடைக்கவில்லை. எனது பெற்றோர் வீட்டில் தஞ்சம் புகுந்த நான் அவர்களுடைய பாதுகாப்பில் இருந்து வருகிறேன். எனது பெற்றோர் வீட்டில் இருக்கும் போதுதான் நான் என் மகனைப் பெற்றெடுத்தேன்.
இந் நிலையில், நாராயணவேணு பிரசாத் என்பவர் என்னிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது ஆதாரமற்ற வழக்கு ஆகும். அவர் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றால் பிரசாந்த் தொடர்ந்த விவாகரத்து வழக்கு தேவையற்றதாகி விடும்.
நாராயணவேணு பிரசாத் தொடர்ந்த வழக்கை முதலில் விசாரிக்காமல் பிரசாந்த் தொடர்ந்த வழக்கை விசாரிப்பது சரியல்ல. இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
நாராயணவேணு பிரசாத் தொடர்ந்த வழக்கை முதலில் விசாரித்து முடிக்காமல் பிரசாந்த் வழக்கை விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகள் அகர்வால், சிங்வி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் பிரசாந்த் தொடர்ந்த விவாகரத்து வழக்கை சென்னை குடும்பநல கோர்ட்டு விசாரிக்க இடைக்கால தடை விதித்தும், வழக்கு விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Click it and Unblock the Notifications











