தேவா-பூமிகா நடிக்கும் தங்கரின் 'களவாடிய பொழுதுகள்'!
'களவாடிய பொழுதுகள்!'.
படத்துக்கு இப்படியெல்லாம் கவிதைத் தலைப்பு வைக்க யார் இருக்கிறார்கள், நம்ம தங்கர் பச்சானை விட்டால்! தனது அடுத்த படத்துக்குத்தான் இப்படி அழகான தலைப்பைச் சூட்டியுள்ளார் தங்கர்.
இந்தப் படத்தின் நாயகனாக பிரபு தேவா நடிப்பது உறுதியாகிவிட்டது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு நாயகனாக நடிக்கிறார் பிரபு தேவா. அவர் கடைசியாக முழுமையான வேடத்தில் நடித்த படம் எங்கள் அண்ணா. அதன் பிறகு தான் இயக்கிய படங்களில் ஓரிரு காட்சிகளில் வந்துபோனதோடு சரி.
இந்தப் படத்தைத் தயாரிப்பவர்கள் அய்ங்கரன் இன்டர்நேஷனல். ஏகன், சேவல், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, வில்லு என வரிசையாக தோல்விப் படங்களைக் கொடுத்திருந்தாலும், ஒரு நம்பிக்கையுடன் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்கள். காரணம் தங்கர் சொன்ன கதை மற்றும் பட்ஜெட். சொன்ன பட்ஜெட்டுக்கு மேல் ஒரு பைசா செலவு வைக்காமல் முடித்துத் தருவேன் என்ற அவரது வார்த்தை அய்ங்கரனுக்கு பெரிய பூஸ்ட்.
இந்தப் படம் பிரபு தேவாவுக்கு மட்டுமல்ல... இன்னொருவருக்கும் மறு ஜென்மம் தருகிறது. அவர் படத்தின் நாயகி பூமிகா சாவ்லா. சில்லுன்னு ஒரு காதலுக்குப் பின் தமிழில் இந்தப் படத்தில்தான் நடிக்கிறார் பூமிகா. திருமணத்துக்குப் பின் அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படமும் இதுவே.
கதாநாயகனுக்கு இணையான வேடத்தில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.
களவாடிய பொழுதுகள் படத்தின் துவக்க விழா, சமீபத்தில் எளிமையாக நடந்தது. சத்தமில்லாமல் படப்பிடிப்பையும் துவங்கிவிட்டார் தங்கர்.
இந்தப் படம் எனது கனவுப் படைப்புகளில் ஒன்று என தாராளமாகச் சொல்லலாம். இதுவரை நான் சொல்லாத கதை, புதிய களம். ஒவ்வொரு காதல் ஜோடியும், களவுபோன தங்கள் பொழுதுகளை நினைத்து உறங்க முடியாமல் தவிக்கப் போகிற படம் இது. மசாலா மோகத்தில் தன்னைத் தொலைத்துக் கொள்ளும் தமிழ் ரசிகர்களை மீண்டும் நம்பி களமிறங்குகிறேன். பார்க்கலாம் என்கிறார் தங்கர்.
வாங்க தங்கர்... நல்ல படைப்புக்காக தூக்கத்தைத் தொலைத்துக் கொள்ள ரசிகர்களும் தயார்தான்!.


Click it and Unblock the Notifications











