இளையராஜாவின் இசை அற்புதம்!

By Staff

Illayaraja
இசையின் மகத்துவம் உலகம் அறிந்ததுதான். ஆனால் அந்த இசையைக் கையாளும் விதத்தில்தான் அற்புதங்கள் நிகழ்கின்றன. இசையை மிகச் சரியாகக் கையாள்வதில் ராஜாவுக்கு நிகர் ராஜாதான்.

சமீபத்தில் ராஜாவின் இசை ஒரு மிகப் பெரிய அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது.

ஜெர்மனியைச் சேரந்த தம்பதிகள் அவர்கள். நிறைமாதத்தை எட்டும் தருவாயில் மனைவி. ஆனால் வயிற்றில் சிசுவின் அசைவையே உணர முடியவில்லை. பெர்லின் மருத்துவமனையில் புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரிடம் போய் செக்கப் செய்துள்ளனர். அவரும் பல சோதனைகள் மற்றும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டு, குழந்தை அசைவின்றி இருப்பதற்கு என்ன காரணமென்று தெரியவில்லை. ஆனால் சிசுவுக்கு உயிர் இருக்கிறது என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.

உயிர் இருந்தாலும் வயிற்றில் குழந்தை கை கால்களை அசைக்கும் போதுதானே ஒரு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் இருக்கும்...

என்ன செய்வதென்றே புரியாமல் தொடர்ந்து ஒவ்வொரு மருத்துவராகப் பார்த்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நம்பிக்கையிழந்து அமைதியாகிப் போனார்களாம். ஒருநாள் இளையராஜாவின் திருவாசகம் இசையை மன நிம்மதிக்காக ஓடவிட்டிருக்கிறார்கள்.

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற சான்றோர் மொழி மெய்யாகிப் போனது.

என்ன ஆச்சர்யம்... சில நிமிடங்களில் வயிற்றில் ஒரு அசைவு தெரிந்துள்ளது. இசையை நிறுத்தியதும் அந்த அசைவும் நின்று விட்டது. தொடர்ந்து நான்குமுறை இப்படிப் போட்டுப் போட்டு நிறுத்தியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை இசையைக் கேட்கும்போதும் குழந்தையின் அசைவு அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. இசை நின்றதும் சில வினாடிகளில் அசைவும் நின்று போனதாம். அப்போதிலிருந்து தொடர்ந்து ராஜாவின் இசைதான் வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கிறது.

சரியாகப் பத்தாவது மாதம், குழந்தை ஆரோக்கியமாக, அதுவும் அறுவைக்கு அவசியமின்றி சாதாரணமாகவே பிறந்து, மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

படிக்க கதை போலத் தோன்றினாலும், இச்சம்பவம் நிஜம்தான் என்பதை மெய்ப்பிக்க அந்த ஜெர்மன் தம்பதிகளே சென்னைக்கு வந்திருந்தனர் சில தினங்களுக்கு முன்பு. அவர்கள் முன்பின் இளையராஜாவைப் பார்த்ததும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவரது இசை மட்டும்தான்.

ராஜாவின் உதவியாளரிடம் விஷயத்தைச் சொன்னதும் அவர் உடனே ராஜாவிடம் விஷயத்தைக் கூற அந்தத் தம்பதிகளை நேரில் சந்தித்து குழந்தைக்கும் ஆசி வழங்கியிருக்கிறார் ராஜா.

ஜெர்மனியின் மருத்துவர்கள் பலரும் இந்த இசை அற்புதத்தை ஒப்புக் கொண்டதோடு, ராஜாவின் திருவாசம் சிடியை வாங்கிக் கேட்டு, மொழி புரியாவிட்டாலும் அந்த இசைக் கட்டுமானத்தில் வியந்து போயிருக்கிறார்கள்.

அதோடு மருத்துவத்துறையில் இந்திய இசையால் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்ற ஆராய்ச்சியிலும் ஜெர்மன் டாக்டர்களை இறங்க வைத்திருக்கிறது இந்த சம்பவம்.

உண்மையில் இந்த அதிசயத்தையெல்லாம் விஞ்ஞானத்தின் துணையின்றி பல ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கள் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள். ஆனால் பாரம்பரியத்தை மறந்து போனதால் நமக்கு நம் பொக்கிஷங்களின் மதிப்பே தெரியாமல் போய்விட்டது.

போகர் மருத்துவத்தை நம்மவர்கள் ஓரங்கட்ட, அதை இன்னும் வெற்றிகரமாகக் கையாண்டு சாதனைகள் புரிகிறார்கள் ஜெர்மானியர்கள்.

இந்திய இசையை, இசைக் கலைஞர்களை பாதுகாக்க, கௌரவிக்க நாம் தவறிவிடக் கூடாது. இளையராஜா என்பவர் வெறும் திரை இசைக் கலைஞர் மட்டுமல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக உணர வைத்திருக்கும் சம்பவம் இது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X