மகாத்மா பஜனுக்கு ராஜா இசை!

கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பஜன் பாடல்கள் இவை. இவற்றை பிர்லா நிறுவனத்தினர் 3 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தனர். இதையடுத்து இளையராஜாவை அணுகிய அவர்கள் மகாத்மாவின் பாடல்களை அவரிடம் கொடுத்து இவற்றுக்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இந்தப் பணியை இசைஞானி இளையராஜா ஒரு மாதத்திற்கு முன்பு முடித்துக் கொடுத்தார். இந்துஸ்தானி இசைக் கலைஞர் பண்டிட் பீம்சென் ஜோஷி பாடல்களைப் பாடியுள்ளார்.
மகாத்மாவின் இந்த பஜன் பாடல்கள் புதன்கிழமை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் ஒலித்து பக்தர்களைப் பரவசப்படுத்தியது.
தெலுங்கு நடிகர் மோகன்பாபு நடத்தி வரும் ஸ்ரீ வித்யாநிகேதன் பொறியியல் கல்லூரியில் மகாத்மாவின் பஜன் சிடி வெளியீட்டு விழா நடந்தது. ஆதித்யா பிர்லா குழுமத்தின் பொது மேலாளர் பாரத் பரேக் வெளியிட, முதல் சிடியை இளையராஜா பெற்றுக் கொண்டார். பின்னர் அதை அவர் மோகன்பாபுவிடம் கொடுத்து கல்லூரியில் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியின்போது இளையராஜா பேசுகையில், மகாத்மாவின் ஆத்மார்த்தமான பஜன் பாடல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன். பிர்லா குழுமத்தின் பணி மிகவும் பாராட்டுதலுக்குரியது. மகாத்மாவுக்கு அவர்கள் உண்மையான அஞ்சலியை செலுத்தியுள்ளனர் என்றார்.
பின்னர் பஜன் பாடல்களிலிருந்து ஓரிரு வரிகளையும் தனது தெய்வீகக் குரலில் பாடிக் காட்டி கூட்டத்தினரை மெய் சிலிர்க்க வைத்தார் இளையராஜா.


Click it and Unblock the Notifications











