பூஜ்ஜிகாடு ஆடியோ - ரிலீஸ் செய்த ரஜினி

திரிஷா தெலுங்கில் நடித்துள்ள புஜ்ஜிகாடு படத்தின் ஆடியோவை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எனக்கு ஒரு மகன் இருந்திருந்தால் அவரை ஹீரோவாக்கி இருப்பேன். அதுவும் பூரி ஜெகன்னாத்தின் அறிமுகத்தில் ஹீரோவாக்கி இருப்பேன் என்று கூறினார்.
பிரபாஷ்-திரிஷா நடித்துள்ள தெலுங்கு படம் 'புஜ்ஜிகாடு'. இந்த படத்தின் கதைப்படி ஹீரோ பிரபாஸ், ரஜினியின் தீவிர ரசிகனாக நடிக்கிறார். ரஜினியை மையமாக வைத்து 'தலைவா தலைவா உன் வழி தனி வழி' என்ற பாடலும் படத்தில் இடம் பெறுகிறது. இந்த படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
பிலிம்சேம்பர் தலைவர் கேஆர்ஜி, தயாரிப்பாளர் ராமராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ரஜினி பேசுகையில், எந்த விழாவுக்கு அழைத்தாலும் வராத ரஜினி இந்த விழாவுக்கு வந்துள்ளார் என்று இங்கு பேசிய அனைவரும் கூறினர். விழாவுக்கு என்னை அழைத்தபோது யோசித்தேன்.
உடனே, உங்கள் வீட்டுக்கு வந்துவிடுகிறோம். அங்கேயே நீங்கள் கேசட்டை வெளியிட்டு போட்டோ எடுக்க அனுமதித்தால் கூட போதும். படத்தின் ஹீரோ உங்கள் ரசிகராக நடிக்கிறார். கேசட்டை நீங்கள் வெளியிட்டால் சென்டிமென்ட்டாக நன்றாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறினர்.
படத்தின் இயக்குனர் பூரிஜெகந்நாத், மிகவும் திறமையானவர். போக்கிரி, சிறுத்த ஆகிய இரு படங்களையும் நான் பார்த்தேன். அன்று முதல் அவரது ரசிகனாகி விட்டேன். அத்தனை முன்னணி நடிகர்களும் தங்களது பிள்ளைகளை அவர் மூலம் ஹீரோவாக்க ஆர்வமாக உள்ளனர்.
கன்னடத்தில் ராஜ்குமாரின் மகனை வைத்து அவர் கொடுத்த அப்பு மிகப் பெரும் ஹிட் படம். அதன் 100வது நாள் விழாவிலும் நான் கலந்து கொண்டேன். எனது நண்பர்களான மோகன்பாபுவும், சிரஞ்சீவியும் பூரி ஜெகன்னாத்தின் திறமையை பாராட்டிக் கூறியுள்ளனர்.
சிரஞ்சீவி தனது மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் பொறுப்பை இவரிடம்தான் கொடுத்தார். எனக்கும் மகன் இருந்திருந்தால் பூரிஜெகந்நாத் மூலமாகத்தான் அவரை ஹீரோவாக்கி இருப்பேன் என்றார் ரஜினி.
இயக்குநர் பூரி ஜெகன்னாத், ஏற்கனவே போக்கிரி என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தவர். அதுதான் தமிழிலும் போக்கிரி என்ற பெயரில் விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக வெளியானது.
இந்த நிலையில் தெலுங்குப் படம் ஒன்றில் ரஜினியை முக்கிய புள்ளியாக வைத்து துணிச்சலுடன் படம் எடுத்துள்ளார் பூரி ஜெகன்னாத்.
நிகழ்ச்சியில் பூரி ஜெகன்னாத் பேசுகையில், இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாரு மட்டுமே. அதில் எந்த சந்தேகமும் இல்லை. என்னைப் போன்ற, பிரபாஸ் போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அவர்தான் ரோல் மாடல், வழிகாட்டி எல்லாம்.
ரஜினி எளிமையின் முழு உருவம், கடின உழைப்பாளி. அதனால்தான் அவரை எனது ஹீரோவின் ஹீரோவாக சித்தரித்துள்ளேன்.
சென்னை, தென்னிந்தியாவின் கலாச்சார தலைநகர். எந்த மொழிப் படமாக இருந்தாலும் இங்கு வெளியிடுவதே பொருத்தமானது. உங்களது படைப்பில் நல்ல சரக்கு இருந்தால் நிச்சயம் சென்னை மக்கள் அதை உற்சாகமாக வரவேற்பார்கள். இது பெரும்பாலான தெலுங்கு மக்களுக்குத் தெரியும். அதனால்தான் எனது படத்துக்கு புஜ்ஜிகாடு மேட் இன் சென்னை என்று பெயரிட்டேன் என்றார்.
ஆந்திரா கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில், பிரபாஸ், திரிஷா, சஞ்சனா, பிரியா மணி, இசையமைப்பாளர் சந்தீப் செளதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் முழுக்க முழுக்க தெலுங்கிலேயே பேசி கலக்கினார்.


Click it and Unblock the Notifications











