சரத்குமார்-ராதாரவி போட்டியின்றி தேர்வு!

நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 12ம் தேதி நடக்கிறது.
வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. ஏற்கனவே தலைவர் பதவி வகிக்கும் சரத்குமார் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட மனுதாக்கல் செய்தார். இதுபோல் ராதாரவியும் மீண்டும் பொதுச் செயலாளராக போட்டியிட மனு கொடுத்தார்.
இருவரையும் எதிர்த்து, மனுத்தக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளான நேற்றுவரை வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் நடிகர் சங்கத் தலைவராக சரத்குமாரும், பொதுச்செயலாளராக ராதாரவியும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.
துணைத் தலைவர் பதவிக்கு விஜயகுமார், மனோரமா ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு வாகை சந்திரசேகரும் மனுத் தாக்கல் செய்தனர். இவர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
நடிகர் சங்கக் கமிட்டி உறுப்பினர்கள் பதவிக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பதவிகளுக்கு மொத்தம் 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
சரத்குமார் அணியில் சத்யராஜ், முரளி, எஸ்.வி. சேகர், சின்னி ஜெயந்த், குயிலி, மும்தாஜ், பசி சத்யா, அலெக்ஸ், சத்யபிரியா, கே.என். காளை, மயில்சாமி, கே.ஆர். செல்வராஜ், எம். ராஜேந்திரன், ஆர். வீரமணி, பிரவீன்குமார், சவுண்டப்பன், இசையரசன், ஜெயமணி, சி.ஐ.டி. சகுந்தலா, ஏ.கே. ராஜேந்திரன், குமரிமுத்து ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
இவர்களை எதிர்த்து பலர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் தேர்தல் நடக்கும் சூழல் உள்ளது. போட்டியிடுவோர் இறுதிப்பட்டியல் வரும் 26ம் தேதி வெளியாகும்.
இன்று மாலை 6 மணிக்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்து இதுகுறித்த முழுமையான விவரங்களைத் தருகிறார்கள் நடிகர் சங்க நிர்வாகிகள்.


Click it and Unblock the Notifications











