உ.பியில் ஆரக்ஷன் படத்தை திரையிட சுப்ரீம் கோர்ட் அனுமதி
டெல்லி: அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ள, பெரும் சர்ச்சையைக் கிளப்பிய ஆரக்ஷன் படத்தை உ.பி மாநிலத்தில் திரையிட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இட ஒதுக்கீடு தொடர்பான கதைக்களத்துடன் கூடிய இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படத்தைத் திரையிட பஞ்சாப், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் பின்னர் இத்தடையை நீக்கி விட்டனர். அதேசமயம், உ.பி. மாநில அரசு இப்படத்தை திரையிட முழுமையான தடையை விதித்தது.
இதை எதிர்த்து படத்தின் இயக்குநர் பிரகாஷ் ஜா உச்சநீதிமன்றத்தை நாடினார். அன்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், படத்தை திரையிட இன்று அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும் உ.பி. மாநில அரசு பிறப்பித்திருந்த 2 மாத கால தடையையும் அது நீக்கி உத்தரவிட்டது.
இதையடுத்து இந்தி மொழி பேசும் முக்கிய மாநிலமான உ.பியில் ஆரக்ஷன் திரைக்கு வருகிறது.
தடை நீக்கத்துக்கு பிரகாஷ் ஜா பெரும் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளார். வெளியிடப்பட்ட நான்கு நாட்களிலேயே இப்படம் ரூ. 26 கோடியை வசூலித்துள்ளது என்பது நினைவிருக்கலாம். தற்போது உ.பியில் திரையிடப்படவுள்ளதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











