twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மன்மதன் அம்பு: கமல் பாட்டும்... வாலியின் பாராட்டும்!

    By Sudha
    |

    பாட்டெழுதுவது கமலுக்குப் புதிதில்லை... ஏற்கெனவே கவிதைகள் புனைந்திருப்பவர் அவர்.

    ஹேராம் போன்ற படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். சற்று இடைவெளிக்குப் பிறகு மன்மதன் அம்பு படத்துக்காக நான்கு பாடல்களை எழுதியுள்ளார்.

    கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள இந்த படத்தில், கமல்ஹாசன் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். படத்தின் கதைப்படி, அவர் நிஷா என்ற பெயர் கொண்ட சினிமா நடிகை. விரக்தியில், அவர் கவிதை எழுதுகிறார்.

    அந்த கவிதையை (பாடலை) நிஜமாக எழுதியவர், கமல்ஹாசன்.

    அந்தப் பாடல்:

    கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
    களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
    உடனே கையுடன் கைகோர்த்தாளா?
    ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

    ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
    அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
    கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
    காதலாய் மாறலாம் எச்சரிக்கை

    கவிதை இலக்கியம் பேசினளாயின்
    காசை மதியாள் எச்சரிக்கை
    உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
    உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

    அறுவடை கொள்முதல் என்றே காமம்
    அமைவது பொதுவே நலமாகக்கோள்
    கூட்டல் ஒன்றே குறியென்றானபின்
    கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

    உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?
    யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
    முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
    ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்

    காமமெனப்படும் பண்டைச் செயலில்
    காதல் கலவாது காத்துக்கொள்
    இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்று
    இயற்றத் துணியும்
    அணி சேர்த்துக்கொள்.

    கவிஞர் வாலி பாராட்டு:

    கமல்ஹாசன் எழுதிய இந்த கவிதை (பாடல்) பற்றி கவிஞர் வாலி கூறுகையில், "மன்மதன் அம்பு படத்துக்காக, கமல்ஹாசன் எழுதிய உரைநடை கவிதை இது. தமிழில் நானும், கண்ணதாசனும் இதேபோன்ற உரைநடை பாடலை எழுதியிருக்கிறோம். நான் எழுதிய "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே,'' இதுபோன்ற பாடல்தான். கண்ணதாசன் எழுதிய "தெய்வமே தெய்வமே''யும் இதுபோன்ற பாடல்தான்.

    கமலுக்கு தமிழிலும் நல்ல அறிவு உண்டு. இசையிலும் நல்ல அறிவு உண்டு. அவர், டி.கே.எஸ்.சண்முகம் அண்ணாச்சியின் நாடகத்தில் இருந்து வந்தவர். தமிழை நன்றாக உச்சரிக்க முடியாதவர்கள், சண்முகம் அண்ணாச்சி நாடகங்களில் நடிக்க முடியாது. ஆக, பால்ய பருவத்திலேயே கமலிடம் தமிழ் அறிவு இருந்தது.

    ஒரு கவிதையே கவிதை எழுதியிருக்கிறது. கமல்ஹாசன், தன் மெய் வருத்தி நடித்து, தமிழ் சினிமாவை மேலே கொண்டு போகிறார். சினிமாவை தாண்டி எழுத்திலும் அவர் சாதித்து வருகிறார்...", என்றார்.

    இந்தப் பாடல் குறித்து நடிகர் பார்த்திபன் கூறுகையில், "கமல் சாருக்கு சிவாஜி எப்படியோ, அதுபோல் எனக்கு கமல் சார். 'மன்மதன் அம்பு' படத்துக்காக அவர் எழுதிய பாடலை எனக்கு போட்டு காண்பித்தார். இந்த பாடல் வெளியாவதற்கு முன், அதன் வரிகள் பிரபலமானால் நன்றாக இருக்கும் என்று நான் அவரிடம் கூறினேன்.

    தங்கத்தை உரசிப்பார்க்க தங்கம் அவசியம் இல்லை. பிரத்யேகமாக ஒரு கல் இருக்கிறது. அந்த கல்லாக நான் இருந்தால், மகிழ்ச்சி. நான் கல்லாக முற்படுவதற்கு காரணம், கமலின் கவிதை தங்கம் என்பதே.

    இந்த கவிதையில் எனக்கு பிடித்த வரிகளை கோடிட்டேன். அது, வரிக்குதிரை மாதிரி அமைந்தது. குறிப்பாக இரண்டு வரிகள். "கலவி முடிந்தபின் கிடந்து பேசினால் காதலாய் மாறலாம் எச்சரிக்கை'' என்ற வரிகளை ரசித்தேன்...,'' என்றார்.

    படத்தின் நாயகியான நடிகை நிஷா (திரிஷா) பாடும் பாடலாக இது அமைந்துள்ளது. இதற்கு பதில் தரும் வகையில் நாயகன் மேஜர் ஆர். மன்னார் (கமல்ஹாசன்) பாடும் பாடல் இது...

    கலவி செய்கையில் காதில் பேசி
    கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
    வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
    குழந்தை வாயை முகர்ந்தது போலக்
    கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்

    காமக் கழிவுகள் கழுவும் வேளையும் கூட
    நின்றவன் உதவிட வேண்டும்
    சமயலின் போதும் உதவிட வேண்டும்
    சாய்ந்து நெகிழ்ந்திடத் திண்தோள் வேண்டும்

    மோதிக் கோபம் தீர்க்க வசதியாய்
    பாறைப் பதத்தில் நெஞ்சும் வேண்டும்
    அதற்குப் பின்னால் துடிப்புள்ள இதயமும்
    அது ரத்தம் பாய்ச்சி நெகுழ்திய சிந்தயும்
    மூளை மடிப்புக்கள் அதிகம் உள்ள
    மேதாவிலாச மண்டையும் வேண்டும்

    வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
    வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
    நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்
    எனக்கெனச் சுதந்திரம் கேட்கும் வேளையில்
    பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்

    இப்படிக் கணவன் வரவேண்டும் என
    ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
    வரந்தருவாள் என் வரலட்சுமியென
    கடும் நோம்பு முடிந்ததும் தேடிப் போனேன்

    பொடி நடைபோட்டே இடை மெலியவெனக்
    கடற்கரை தோறும் காலையும் மாலையும்
    தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
    முற்றும் துறந்து மங்கையரோடு
    அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்

    மூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
    அக்காளில்லா வேளையிலே அவன் சக்காளத்தி வேண்டும் என்றான்
    எக்குலமானால் என்ன என்று வேற்று மதம் வரை தேடிப்போனேன்

    வரவரப் புருஷ லட்சணம் உள்ளவர்
    திருமணச் சந்தயில் மிகமிகக் குறைவு
    வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
    நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
    உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி?
    பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
    அதுவும் இதுவும் உதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்குமுண்டோ?
    உனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ
    அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்
    ஸ்ரீ வரலக்ஷமி நமோஸ்துதே.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X