ஸ்ரேயா, ரகசியா, நயன், நமீதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திரைப்படங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதையும், ஆபாச உடைகளை அணிந்து நடிப்பதையும் கண்டித்து சென்னையில் மனித உரிமைகள் கழகத்தின் சார்பில் பெண்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ் சினிமாவில் ஆபாசம் அதிகரித்துக் கொண்டே போகிறது. உடை என்ற பெயரில், எதையாவது அரைகுறையாக போட்டுக் கொண்டு ஆபாசமான நடனங்களைப் புகுத்தி விடுகிறார்கள். கேட்டால், மக்கள் இதை ரசிக்கிறார்கள் என்று மக்கள் தலை மீது குற்றத்தை தள்ளி விடுகிறார்கள்.
கலாச்சாரச் சீரழிவின் மொத்த அடையாளமாக தமிழ் சினிமாப் படங்கள் மாறி வரும் நிலையில், திரைப்படத்தில் பெண்களை ஆபாசமாக காட்டுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தின் சார்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை அரசு விருந்தினர் மாளிகை அருகே மனித உரிமைகள் கழகத்தின் சார்பாக 500 பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இரட்டை அர்த்த வசனக் காமெடி...
காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் திரைப்படங்களில் இடம் பெறுவதையும், பெண்களை ஆபாசமாக படம் எடுத்து காட்டுதவற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நடிகைகள் நமீதா, நயனதாரா, ஸ்ரேயா, ரகசியா ஆகியோர் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிக்கிறார்கள் என்று அவர்களுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
குறைக்காதே குறைக்காதே பெண்களின் ஆடைகளை குறைக்காதே, கெடுக்காதே கெடுக்காதே தமிழ் கலாச்சாரத்தை கெடுக்காதே போன்ற கோஷங்களையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தை பெருமளவிலான மக்கள் திரண்டு நின்று பார்த்தனர்.


Click it and Unblock the Notifications











