6 ஆண்டுகளுக்குப் பின் இதயங்களை இசை மழையால் நனைக்க வரும் இசைஞானி... டிசம்பர் 28-ல் லைவ்!

தனக்குள் ஆயிரம் கவலைகள் இருந்தாலும், அதை அவர் வெளிக்காட்டியதில்லை. தன் இசையால் எப்போதும் கேட்பவர் மனதை லேசாகச் செய்வது அவரது பாணி, ஒரு குயிலைப் போல!
இதோ... அவரது ராஜ இசை விருந்தை நேரில் அனுபவித்து மகிழ அனைவருக்கும் மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு. ஆம்... இன்னும் சில தினங்களில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாய் நடக்கிறது.
கடைசியாக அவர் இசைக்கச்சேரி நடத்தி கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகின்றன. அந்த மறக்கமுடியாத இசை நிகழ்ச்சியை நடத்தியவர்கள் ஜெயா டிவி நிறுவனத்தினர், இதே நேரு ஸ்டேடியத்தில்தான் (அதன் பிறகு ராஜா டிவிக்காக வெஸ்லி மைதானத்தில் நடந்த ஒரு கச்சேரியில் ராஜா பங்கேற்றார். ஆனால் ராம்ஜி குழுவினர் நடத்திய கச்சேரி அது!)
இப்போதும் ரசிகர்களுக்கு இந்த இசை விருந்தினைப் படைக்கும் ஏற்பாட்டைச் செய்திருப்பது அதே ஜெயா டிவிதான். வரும் டிசம்பர் 28-ம் தேதி இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது. டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்து பெறமுடியும்.
கடந்த முறை நேரு ஸ்டேடியத்தில் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்த போது கூட்டம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை லைவ்வாக ஒளிபரப்பினார்கள். அப்போதும் முதல்வர் ஜெயலலிதாதான். தன் வீட்டில் இருந்தபடியே, ராஜாவின் முழு நிகழ்ச்சியையும் கிட்டத்தட்ட 6 மணிநேரம் இடைவிடாமல் கேட்டு ரசித்தார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது!


Click it and Unblock the Notifications











