பெரும் நஷ்டம்-குசேலனைத் தூக்குகிறது சாய்மீரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள குசேலன் படம் எதிர்பாராத வகையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் வசூல் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதால், தியேட்டர் உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்ட வேண்டும் என ரஜினிக்கும், பிரமீட் சாய்மீரா நிறுவனத்திற்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் தீரும் வரை கவிதாலயா மற்றும் செவன் ஆர்ட்ஸ் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் வருகிற 23ம் தேதி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சென்னையில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இப்படத்ைத பிரமீட் சாய்மீரா நிறுவனம் ரூ. 67 கோடிக்கு வாங்கி விநியோகித்துள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இவற்றில் சாய்மீராவின் கட்டுப்பாட்டில் உள்ள தியேட்டர்களும் அடங்கும்.
இந்த நிலையில் தங்களது தியேட்டர்களில் போடப்பட்டுள்ள குசேலன் படத்தை ஓரிரு நாட்களில் எடுத்து விட சாய்மீரா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குசேலன் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளையும் ரஜினியிடம் விட்டு விட்டு ஒதுங்கிக் கொள்ளவும் அது தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, குசேலன் படத்தை மறுபடியும் டிரிம் செய்து வெளியிடலாமா என்று ரஜினி தரப்பில் யோசிக்கப்பட்டு வருகிறதாம். அதன்படி ரஜினியின் காட்சிகளை கூடுதலாக்கவும், காமெடிக் காட்சிகளை கூடுதலாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே தான் நடித்த பல காமெடி சீன்களை படத்தின் நீளம் கருதி வெட்டி விட்டனர் என்று வடிவேலு வருத்தப்பட்டிருந்தார். குறிப்பாக பாம்பு காட்சி ஒன்று படப்பிடிப்பின்போது வெகுவாக ரசிக்கப்பட்டதாகவும், அந்தக் காட்சி படத்தில் இடம் பெறாமல் போய் விட்டது என்றும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.
எனவே, இதுபோன்ற பாசிட்டிவான சில காட்சிகளை படத்தில் இணைத்து மறுபடியும் குசேலனை திரையிடலாமா என்ற ஐடியாவும் இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











