கருணாநிதி தலைமையில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பாராட்டு விழா! - ரஜினி, கமல் பங்கேற்பு

மறைந்த நடிகர் ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மகன், ஒய்.ஜி.மகேந்திரன். இவர், கடந்த 50 வருடங்களாக நாடகங்களில் தொடர்ந்து நடிக்கிறார்.
ஒய்.ஜி.மகேந்திரன் முதன் முதலாக தனது 11வது வயதில், 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம்தான் பின்னர் சிவாஜிகணேசன் நடித்து பார் மகளே பார் என்ற பெயரில் திரைப்படமாக வந்தது.
இதுவரை அவர் 60 நாடகங்களில் நடித்துள்ளார். 5,000க்கும் மேற்பட்ட முறை நாடக மேடை ஏறியுள்ளார்.
இவருடைய 60வது நாடகம், வியட்நாம் வீடு. இது, மறைந்த சிவாஜி கணேசன் நடித்த நாடகம். சிவாஜி நடித்த பிரஸ்டீஜ் பத்மநாபன் வேடத்தில், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்து வருகிறார்.
இந் நிலையில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சென்னை காமராஜர் அரங்கில், வரும் 30ம் தேதி மாலை 6 மணிக்கு பாராட்டு விழா நடக்கிறது.
விழாவுக்கு, முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி, ஒய்.ஜி.மகேந்திரனைப் பாராட்டிப் பேசுகிறார்.
ஒய்ஜி மகேந்திரனின் சகலையான ரஜினி மற்றும் கமல்ஹாசன், இயக்குநர் கே.பாலசந்தர், கவிஞர் வைரமுத்து ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டு பாராட்டிப் பேசுகிறார்கள்.
ஒய்.ஜி.மகேந்திரனுடன் நீண்ட காலமாக நடித்து வரும் நகைச்சுவை நடிகர் சுப்புணி, பல நாடகங்களை இயக்கிய ஏ.ஆர்.எஸ், மானேஜராக பணிபுரிந்து வரும் ஜெகதீசன் ஆகியோரும் இந்த விழாவில் கெளரவிக்கப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











