ரஜினி அரசியலுக்கு வந்தால்.. செளந்தர்யா

நீண்ட காலமாக ஒருவரின் அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள். அவர் ரஜினி என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல ஆண்டுகளாகவே இப்படி பேச்சளவிலேயே இருக்கும் ஒரு 'அரசியல்வாதி'யாக மாறியிருக்கிறார் ரஜினி.
ஒவ்வொரு தேர்தலின்போதும் ரஜினியின் வாய்ஸை எதிர்பார்ப்பதும் ஒரு சடங்காகி விட்டது. ஆனாலும் ரஜினி இதுவரை வர மாட்டேன் என்றும் சொல்லவில்லை, வருவேன் என்றும் சொல்லவில்லை.
முன்பெல்லாம் படத்துக்குப் படம் ஏதாவது அரசியல் பன்ச் வைத்து ரசிகர்களைக் குஷிப்படுத்தி வந்தார் ரஜினி. இப்போது அதையும் நிறுத்தி விட்டார்.
எப்படியெப்படியோ தங்களது தலைவரை அரசியலுக்கு இழுத்து விடும் முயற்சிகளை மேற்கொண்டு பார்த்து விட்டனர் ரசிகர்கள். தலைவரோ, இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். ஆனால் ரசிகர்களும் விடுவதாக இல்லை. தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டுதான் உள்ளனர்.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் செளந்தர்யா ரஜினியின் கருத்து அமைந்துள்ளது. எல்லோரையும் போலவே நானும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன். அவர் வந்தால் நிச்சயம் நல்லது மட்டுமே செய்வார் என்று கூறியுள்ளார் செளந்தர்யா.
இதன் மூலம், செளந்தர்யாவும், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்ற தனது மனக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து செளந்தர்யா ஒரு நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில்,
என் தந்தை ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லோரும் ஆர்வப்படுகிறார்கள். அதுபோல் நானும் அவரது அரசியல் பிரசேவத்தை எதிர்பார்க்கிறேன்.
அவர் அரசியலில் ஈடுபட்டால் மற்றவர்களை திரும்பி பார்க்க வைப்பார். காரணம் அவருக்கு தெரிந்தது நல்லது செய்ய வேண்டும் என்பதுதான். அரசியலுக்கு வந்தால் தனது நடவடிக்கை மூலம் தனி முத்திரை பதிப்பார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவரது செயல்பாடுகள் எல்லோரையும் கவர்வதாகவே இருந்துள்ளன. அது அரசியலுக்கு வந்தாலும் இருக்கும். அவர் வருவாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை என்று கூறியுள்ளார் செளந்தர்யா.
எப்ப வருவார், எப்படி வருவார்னு தெரியவில்லை. ஆனால் எப்படியாவது வருவார் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications