சித்து- ப்ளஸ் டூ பர்ஸ்ட் அட்டம்ட்!

பாரிஜாதம் படத்துக்குப் பிறகு பாக்யராஜ் இயக்கிவரும் படம் சித்து- ப்ளஸ் டூ பர்ஸ்ட் அட்டம்ட். பாக்யராஜ் மகன் சாந்தனு நாயகனாக நடிக்க, சாந்தினி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
சீதா, அவினாஷ், கஞ்சா கருப்பு, ராஜேஷ் என தேர்ந்த நடிகர்கள் நடிக்கும் இந்தப் படத்துக்கு தரன் இசையமைக்கிறார். லேகா சோனாட்டன் பின்னணி இசையமைத்துள்ளார். முதல்முறையாக யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவும் பாடியுள்ளார்.
இளமை ததும்பும் காதல் படம் இது. ப்ளஸ் டூ பெயிலாகிவிட்ட சாந்தனும் சாந்தினியும் பெற்றோருக்கு பயந்து ஊரைவிட்டு ஓடிவிடுகிறார்கள் (தனித்தனியாகத்தான்). இருவரும் சென்னையில் எதேச்சையாக சந்திக்கிறார்கள். அதன் பிறகு இருவர் வாழ்விலும் நிகழ்ந்த திருப்பங்களை தனக்கே உரிய நகைச்சுவைக் குறும்புகளுடன் சொல்லியிருக்கிறாராம் பாக்யராஜ்.
சாந்தனு மற்றும் கஞ்சா கறுப்பு காம்பினேஷனில் உருவாகியுள்ள காமெடி காட்சிகள் படத்தின் இன்னொரு சிறப்பு என்கிறார்கள்.
பாக்யராஜின் கேபிஆர் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. ஆனாலும் படம் குறித்து எந்த செய்தியும் மீடியாவுக்கு தரப்படாமலேயே இருந்தது.
இப்போது படத்தின் உரிமையை மோசர் பேர் வாங்கிய பிறகுதான் படம் குறித்த அதிகாரப்பூர்வமான செய்தியைத் தந்திருக்கிறார்கள்.
இதுகுறித்து மோசர் பேர் சிஓஓ ஜி தனஞ்செயன் கூறுகையில், "பாக்யராஜுடன் கைகோர்ப்பது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நிச்சயம் ரசிகர்களின் மனதைக் கவரும் படமாக இது அமையும். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. வரும் அக்டோபர் 31-ம் தேதி பிரமாண்டமான முறையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. திங்க் மியூசிக் நிறுவனம் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது," என்கிறார்
டிசம்பர் இறுதியில் வெளியாகிறது சித்து - ப்ளஸ் டூ பர்ஸ்ட் அட்டம்ட்.


Click it and Unblock the Notifications











