அசோகவனத்திற்கு சிக்கல்?

ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் தயாரிக்கும் பிரமாண்டப் படம்தான் அசோகவனம். மணிரத்தினம் இப்படத்தை தமிழ் மற்றும் இந்தியில் இயக்கி வருகிறார்.
அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம், பிரியா மணி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு கேரளாவில் நடந்து கொண்டிருக்கிறது.
இப்படத்தை ரூ. 120 கோடியில் தயாரிக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இந்த பட்ஜெட்டைக் குறைத்துக் கொள்ளுமாறு ரிலையன்ஸ் நிறுவனம், மணிரத்தினத்தை கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளதாம்.
அந்தக் கடிதத்தில், படத் தயாரிப்புச் செலவில் பாதியைக் குறைத்துக் கொள்ள முயற்சியுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
மேலும், தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலையின் பின்னணியில் இப்படத்திற்கு பெரிய அளவில் வர்த்தகம் இருக்க வாய்ப்பில்லை. எனவே செலைவைக் குறைத்தே ஆக வேண்டும் எனவும் ரிலையன்ஸ் பிக் பிக்சர்கள் கூறியுள்ளதாம்.
இதனால் ஒன்று செலவைக் குறைக்க வேண்டும் அல்லது வேறு தயாரிப்பாளரை நாட வேண்டும் என்ற நிலைக்கு மணிரத்தினம் தள்ளப்பட்டுள்ளார்.
கேரளாவில் விறுவிறுப்பாக ஷூட்டிங் போய்க்கொண்டுள்ள நிலையில், செலவைக் குறைக்குமாறு ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளதால் அப்செட் ஆகியுள்ளாராம் மணி.
இதுமட்டுமல்லாமல், சேரன் நடித்து இயக்கவிருந்த ஆட்டோகிராப்-2, ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த சிங்கம், பாசிலின் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பதாக இருந்த புதிய படம் ஆகியவற்றையும் ரிலையன்ஸ் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications











