twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் டிவியின் காக்கி!

    By Staff
    |

    Khaki
    அழுது வடியும் சீரியல்கள், மெகா சீரியல்கள் உள்ளிட்டவற்றைத் தவிர்த்து டிவியை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஆனால் வழக்கமான இந்த மசாலாக்களிலிருந்து சற்றே விலகி தனது நேயர்களுக்கு வித்தியாசமான இரு நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது விஜய் டிவி.

    புதுமை படைப்பதில் புரட்சி படைத்து வரும் விஜய் டிவி, கனா காணும் காலங்களை புத்தம் புதுப் பொலிவுடன் வழங்கவுள்ளது. அடுத்து காக்கி என்ற வித்தியாசமான தொடரை வழங்கவுள்ளது.

    காக்கி ...

    விறுவிறுப்பான ஆக்ஷன் தொடரான காக்கி தொடர் 22ம் தேதி திங்கள்கிழமை முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. திங்கள் முதல் வியாழக்கிழமை வரையிலான தொடர் இது.

    நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காக தினசரி நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த முயற்சியில் பலர் உயிரையும் இழக்கின்றனர். இப்படிப்பட்ட தீரம் மிகுந்த காவல் அதிகாரிகள் குறித்த தொடர்தான் காக்கி.

    காவல்துறையின் கெளரவம், மரியாதை, பெருமை, வீரம், கடமை, ஒழுக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கதை இது. நல்லதுக்கும், தீயதுக்கும் இடையிலான போராட்டமே கதையின் களம்.

    மதியழகன், தமயந்தி, அர்ஜூன், ராகவன், ஞானவேல், அன்புச்செல்வன் ஆகிய ஐந்து இளம் காவல்அதிகாரிகள் இந்தக் கதையின் நாயகர்கள்.

    தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் வித்தியாசமான முயற்சியாக அமைந்துள்ளது காக்கி. ஆக்ஷன் விறுவிறுப்போடு, குடும்ப சென்டிமென்ட்டும் கலந்து காக்கியை வித்தியாசமான கலவையாக வழங்குகிறது விஜய் டிவி.

    இதில் விசேஷம் என்னவென்றால், காவல்துறை அதிகாரிகளாக இருக்கும் ஐந்து பேரும், நிஜமான காவல்துறை அதிகாரிகளிடம் பயிற்சி பெற்றுள்ளனராம். இதனால் இவர்களின் நடிப்பு நிஜம் போலவே இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் பிரம்மா.

    டச் ஸ்க்ரீன் மீடியா பிரைவேட் லிமிட்டெட்டின் தயாரிப்பான இந்த தொடருக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். பல சீரியல்களின் டைட்டில் பாடல்களுக்கு இசையமைத்து ஏற்கனவே பாப்புலர் ஆனவர் இவர். ராஜா சந்திரசேகர் வசனம் எழுதியுள்ளார்.

    இதேபோல விஜய் டிவியின் ஹாட் சீரியல்களில் ஒன்றான கனா காணும் காலங்கள் புத்தம் புதுப் பொலிவுடன், புத்தம் புது கலைஞர்களுடன் கலக்க வருகிறது.

    கனா காணும் காலங்கள் ... புதிய சீசன்

    யாராலும் மறக்க முடியாத ஒரு இடம் பள்ளிக்கூடம். எதையும் எளிதில் மறந்து விடுவார்கள். ஆனால் பள்ளிக்காலம் என்றென்றும் மனதிலிருந்து மறையாத அருமையான காலம்.

    பள்ளிப் பருவத்து நண்பர்களை மறக்கவே முடியாது. இதை அடிப்படையாகக் கொண்டு விஜய் டிவியில் வெளியாகி வரும் தொடர்தான் கனா காணும் காலங்கள்.

    மாணவர்கள் வரலாம், போகலாம். ஆனால் பள்ளி அங்கேயேதான் இருக்கும். அப்படியேதான் இருக்கும்.

    அந்த அருமையான தருணங்களை நம் முன் காட்டும் தொடர்தான் கனா காணும் காலங்கள்.

    12வது வகுப்பை முடித்து விட்டு வெளியே செல்கிறது ஒரு மாணவர் கூட்டம். அடுத்த பேட்ச் உள்ளே வருகிறது. இதற்கான புதுமுகங்களை தேர்வு செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆடிஷன் நடந்தது. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நடிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் தேறியவர்களுக்கு நாடகக் கலைஞர்கள் மூலம் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    இந்த புதிய பேட்ச் இடம் பெறும் கனா காணும் காலங்கள் செப்டம்பர் 22ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. புதிய சீசன் இளைஞர்கள் அன்று அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.

    புதிய கனவுகளுடன் கூடிய புதிய சீசன் கனா காணும் காலங்கள் வேடிக்கை, விளையாட்டுக்களுடன் நேயர்களை லயிக்க வைக்க வருகிறது.

    உங்களது பள்ளிக்கூட நினைவுகளுடன், திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு கனா காணும் காலங்களைக் காண தவறாதீர்கள்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X