'தாரே ஜமீன் பர்' என் கதை-சகுந்தலா தேவி

Dyslexia எனப்படும் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட (எண்கள், எழுத்துக்களை பிரித்தரிவதில் சிக்கல்) ஒரு குழந்தையின் போராட்டங்கள், அவனை அதிலிருந்து மீட்டெடுக்கும் ஆசிரியர், அவர்களுக்கிடையே மலரும் அன்பு என மிக அழகாக சொல்லப்பட்ட கதை அது.
ஆசிரியராக அமீர் கானும், சிறுவனாக தர்ஷீல் சபாரியும் நடிப்பில் பின்னியெடுத்த படம்.
ஆமிர் கானே தயாரித்து, இயக்கிய இந்தப் படம் உலகம் முழுக்க பாராட்டுப் பெற்றது. படம் வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாகிவிட்டது.
இந் நிலையில் இப்போது படத்தின் கதைக்கு உரிமை கொண்டாடி புகார் எழுப்பியுள்ளார் கணித நிபுணர் சகுந்தலா தேவி.
சீனாவின் டிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
தாரே ஜமீன் பர் படத்தைப் பார்த்த என் நண்பர்கள் பலர், நான் எழுதிய In the wonderland of numbers கதையிலிருந்து தான் அமிர்கான் ஐடியாவை அப்பட்டமாகத் திருடியிருப்பதை சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நானும் அந்தப் படம் பார்த்தேன். அது எனது புத்தகத்தில் உள்ள கதைதான்.
நான் இதுவரை அமீர் மீது வழக்குப் போடவில்லை. ஆனால், அமீர் கான் நிச்சயம் எனக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
எனது புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு நானே ஒரு படத்தைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளேன்.
முன்பு எனது The whole world is mad என்ற சிறுகதையைத் திருடித் தான் ராஜேஷ் கண்ணாவை வைத்து ரெட் ரோஸ் படத்தை எடுத்தார்கள். இப்போது தாரே ஜமீன் பர்...
கம்ப்யூட்டர் வந்த பின் மக்களிடம் கணிதத்தில் ஆர்வம் குறைந்து போய்விட்டது வருத்தமான விஷயம். இது முன்பு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நடந்தது. இப்போது இந்தியாவிலும் கணித ஆர்வம் குறைந்து வருகிறது என்று கூறியுள்ளார்.
கர்நாடகத்தைச் சேர்ந்தவரான சகுந்தலா பெங்களூரில் வேத கணிதம் குறித்த ஆராய்ச்சிக்காக ஒரு நிறுவனத்தைத் துவக்க திட்டமிட்டுள்ளார்.
சூத்திரங்கள், ஸ்லோகங்களில் ஏராளமான கணிதக் கூறுகள் நிறைந்து கிடப்பதாகக் கூறும் சகுந்தலா, 'உங்களுக்கு ஒன்று தெரியுமா?. எனக்கு கம்ப்யூட்டரை இயக்கத் தெரியாது' என்கிறார்.
நீங்களே ஒரு கம்ப்யூட்டர் தானே சகுந்தலா!


Click it and Unblock the Notifications











